பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

இந்தக் கதையைக் கேள்விப்பட்ட கப்பலில் வந்திருந்த மதகுருக்களின் தலைவர், குவாக்கநாகரியைப் பிடித்துக் கொன்றால் மற்றவர்களுக்கெல்லாம் புத்திவரும் என்று கூறினார். ஆனால் கொலம்பஸ் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. உண்மையில் தலைவன் குவாக்கநாகரி கடைசிவரை ஸ்பானியர்களின் நண்பனாக இருந்தான். ஆனால் இந்நிகழ்ச்சி கொலம்பசுக்கு ஸ்பானியர்களிடையே இருந்த செல்வாக்கைக் குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். கொலம்பசுக்கும் இந்தத் துயரக் கதையைக் கேட்டது முதல், உள்ளத்தில் கவலை பீடித்துக்கொண்டது.