பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


உலகியல் வழக்கு. செத்துப் பிணம் கிடந்த இடத்தில் படைப்பதும், பிணத்தைப் புதைத்த இடத்தில் (சமாதி மேடையில்) படைப்பதும், செத்த பின்னர் இறுதிச் சடங்கு நடக்கப்போகும் கடைசி நாள் வரையும் நாடோறும் படைப்பதும் மரபு. ஆண்டுக்கு ஒரு முறை வரும் இறந்த நாளில் நினைவு நாள் (திவசம்) கொண்டாடிச் சிறப்பாகப் படையல் செய்வதும் தொன்றுதொட்ட மரபாகும். உலகெங்கும் உள்ள கிறித்தவ சமயத்தினர், “கல்லறைத் திருநாள் (All Souis Day) என ஒரு நாள் குறிப்பிட்டு, அந்நாளில், செத்தவர்களைப் புதைத்துள்ள கல்லறைகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்தும், சாம்பிராணி புகைத்தும், மெழுகுவத்தி ஏற்றியும் வழிபாடு செய்வது மரபு. செத்தவர்கள் எத்தகையவராயினும், அவர்கள் தெய்வமாகிக் கடவுள் உலகத்தில் போய்க் கலந்துவிட்டனர் என்னும் பொருளில், அவரவர் உறவினர்கள், அவரவர் மதத்தின் மரபுக் கேற்ப, சிவலோக பதவியடைந்தார்-வைகுண்ட பதவி எய்தினார்-திருநாடு (மோட்ச உலகம்) அலங்கரித்தார் பரமபதம் சேர்ந்தார்-பரமண்டலம் அடைந்தார்-என்றெல்லாம் கூறுவது மரபு. இருப்பவர்களை நல்லபடி யாக வைக்கவேண்டும் என, இறந்தவர்களை நினனந்து இருப்பவர்கள் வேண்டிக்கொள்வதும் உண்டு. இச்செய்திகளால், செத்தவர்கள் தெய்வமாகிவிட்டனர் என மற்றவர்கள் எண்ணுகின்றனர் என்னும் கருத்து கிடைக்கிறது.


நடுகல் வழிபாடு

மறப்போர் புரிந்து மாண்ட வீரர்க்கும், வடக்கு இருந்து மாண்ட மாண்பினர்க்கும், கற்பிற் சிறந்த மகளிர்க்கும், அரும்பெருஞ் செயல் புரிந்த ஆன்றோர்க்கும் அவர்தம் நினைவாக அவர்கள் பெயரால் கல்நட்டு அக்கல்லைக் கடவுளாகக் கருதிப் பூசை செய்து வழி