பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


சிலைகள் செய்து வைக்கப்பட்டிருந்தன என்னும் குறிப்பு புலப்படலாம். அடுத்து அதே புலவர் பாடியுள்ள

“கிரைகிலை நடுகல் பொருந்தி இமையாது
இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவ தாயிற் பெரிய
ஓடை யானை உயர்ந்தோ ராயினும்
நின்றாங்குப் பெயரும் கானம்”


(அகம்-நித் திலக் கோவை-387)

என்னும் பாடல் பகுதியின் கருத்தாவது:-வரிசையாக உள்ள நடுகற்களில் பதுங்கியுள்ள பல்லிகள் ஒலி எழுப்பு கின்றனவாம். அவ்வொலியைக் கேட்டுப் பெரும் படையு டைய பேரரசரும், நிமித்தம் (சகுனம்) சரியில்லை எனத் தம் ஊருக்குத் திரும்புவராம்.

இச் செய்தியால், பல்லிகள் தங்கும் அளவுக்கு நடுகற்கள் பழமை பெற்றிருந்தன என்பதும், அக்கால மக்களும் பல்லி சொல்லை நிமித்தமாக நம்பினர் என்ப தும் புலப்படும்.

வேண்டுதல்

இக்காலத்தில் மக்கள் தங்கட்கு இன்னது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வது போலவே, அக்காலத்தில் மக்கள் தங்கட்கு வேண்டியதை அருளுமாறு நடுகல்லாகிய தெய்வத்தைத் தொழுது வேண்டிக் கொண்டுள்ளனர். இதை அறிய, புறநானூற்றிலுள்ள ஒரே ஒரு பாடலை மட்டும் எடுத்துக் கொள்வோம்:

ஒரு சிற்றுாரில் இருந்த பெண் ஒருத்தி, போர் மறவனாகிய தன் கணவனும் அவன் தலைவனாகிய அரசனும் பகைவென்று நலம் பெற வேண்டும்-தான் விருந்து போற்ற வேண்டும்-இதற்கு அருள் புரிதல் வேண்டும்