பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


12. மனிதரும் தெய்வம் ஆகலாம்


“மனிதரும் தெய்வம் ஆகலாம்” என்னும் தொடரில் உள்ள மனிதரும் என்னும் சொல்லில் உள்ள உம்மையின் பொருளை விளக்கப் பின்னே மூன்று செய்திகள் தரப்படும் :


ஒன்று: இற்றைக்கு (1988) இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், கிரேக்க நாட்டில், டயோனியசு என்னும் பெரியார் ஒருவர் பட்டப் பகலில் கையில் விளக்கை வைத்துக் கொண்டு பலர் போகும் தெருவழியே ஏதோ தேடிக்கொண்டு சென்றாராம். அவரைக் கண்ட ஒருவர், பட்டப்பகலிலே கையில் விளக்கை வைத்துக் கொண்டு என்ன தேடுகிறீர்கள் என்று வினவினாராம். அதற்கு அப்பெரியார், மனிதர் ஒருவராவது கிடைப்பாரா என மனிதன்ரத் தேடுகிறேன் என்று கூறினாராம்.


இரண்டு: பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவொற்றியூரில், நெல்லிக்காய்ப் பண்டாரத் தெருவில், உடையில்லாத அம்மணத் துறவி ஒருவர் ஒரு திண்ணையில் அமர்ந்துகொண்டு, தெருவே போகின்றவர் வருகின்றவர்களைப் பார்த்து, இதோ ஒரு நாய் போகிறது-இதோ ஒரு நரி போகிறது-இதோ ஒரு பன்றி போகிறது-இதோ ஒரு மிருகம் போகிறது-என்றெல்