பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

சமுதாய ஏற்றத் தாழ்வுகள்

அடுத்தபடியாக. சமுதாய வாழ்க்கையில் பலதுறைகளிலும் உள்ள பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு எண்ணத்தில் ஈடுபடலானேன்.

“கல்லானே யானாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்"
(34)

என்னும் ஒளவையாரின் நல்வழிப் பாடலின் கருத்தை நடைமுறையில்-எனது சொந்த வாழ்க்கையிலும் கண்டு சரிபார்த்துக் கொண்டேன். யான் மயிலம் கல்லூரியில் ஆசிரியனாய்ப் பணியாற்றிக் கொண்டிருந்த போது என் தமையனார் குடும்பத்துக்கு எவ்வளவோ பொருள் உதவி புரிந்தேன். இடையில் ஒராண்டு காலம் கடுமையாய் நோயுற்று வருவாய் இன்றி அல்லலுற நேர்ந்தது. திருமணத்துக்கு முன்பே பெற்றோரை இழந்து விட்ட யான், இந்த வருமானம் இல்லாத நோய்க் காலத்தில் என் அண்ணன் வீட்டில் சிறிது காலமும் என் மாமனார் வீட்டில் சிறிது காலமுமாக இருந்து வந்தேன். அப்போது, என் அண்ணன் மனைவியாகிய என் அண்ணியால் யான் எய்திய இன்னல்களும், என் மாமனார் வீட்டில் எனக்கு நேர்ந்த இழிவுகளும், என்னைச் சிந்தனையில் ஆழ்த்திப் பெரிய தத்துவ வாதியாக மாற்றிவிட்டன: உலகின் உண்மை நிலையை நன்கு உணர்ந்து கொண்டேன்.

நிலையாமை உணர்வு அடுத்த படியாக உலக நிலையாமை உணர்வும் என்னை அடிமைப்படுத்திக் கொண்டது. எங்கள் பெற்றோர்க்கு யாங்கள் பன்னிரண்டு பிள்ளைகள். அவர்