சொந்தநன் மக்களைக் கண்டபெற்றோர்
சொக்கி யுள்ளம்இன்ப வெள்ளம்வீழ்ந்தார்
என்ன தவஞ்செய்தோம்! கண்ணகியாள்
ஏற்றநன்மருகியாய்வந்தடைந்தாள்
இன்ன உரைகளை இயம்பிநின்றார்
ஏந்தல் கோவலனை யீந்தமக்கள்
மாலோன் அவதார மானசீலன்
மாமுரு கன்எனும் எழிற்பாலன்
மேலைத் தவத்தால்நம் மருமகனாய்
மேவினம் என்றான்மா நாய்கமன்னன்
கண்ணகி யைப்பெற்ற புண்ணியத்தாய்
கண்டதன் மருகனாம் கோவலனைக்
கண்ணிமை கொட்டாது பார்த்துநின்றாள்
கட்டழ கன்இவன் தெய்வமென்றாள்
பார்த்தவர் அனைவரும் ஆர்த்துநின்றார்
பார்செய்த புண்ணியம் என்னவென்றார்
ஆர்த்தவர் வாழ்த்திய வாழ்த்தொலிகள்
அகில உலகமும் கேட்டதையா!
புதுமணம் கொண்ட கோவலனும் கண்ணகியும் புத்தமுதுச் சுவையும்போல் சித்தங்கலந்து, கணப்பொழுதும் பிரியாமல் கனிந்த இன்பத்தைத் துய்க்கலானார்கள்.கொழுங்குடிச் செல்வனாகிய மாசாத்துவான் மாளிகை ஏழடுக்கு மாடங்களை யுடையது. அவற்றுள் நாலாவது மாடமாகிய நடுநிலை மாடத்தில் இடையறாத இன்பவெள்ளத்தில் மூழ்கினார்கள். கருத்தொருமித்த காதற் செல்வங்களாகிய கோவலன் கண்ணகியின் புதுமணவாழ்வைக் கண்டு, அவர்தம் பெற்றேர்கள் அளவற்ற மகிழ்ச்சி யடைந்தார்கள்.