கண்ணகி கதை
17
பண்ணுறு குழலும் யாழும்
பாங்கமழ் தச்சொல் கேட்டு
விண்ணமிழ் தென்னும் செவ்வாய்
மேவுநீர் அதனை யுண்டு
தண்ணொளி மேனி யுற்றுத்
தாங்குநல் மணம் உயிர்த்தான்.
வசனம்
"கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள"
என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவனார்.ஐம்புல இன்பங்களையும், அன்பும் அறிவும் அழகும் ஒருங்கு நிறைந்த பெருங்குண மங்கையிடத்தே ஒருவன் பெறலாம் என்பதே இதன் கருத்து. அவ்விதமே ஐம்புல இன்பங்களையும் கண்ணகியிடத்தே கோவலன் பெற்று மகிழ்ந்தான். இவர் தம் இன்ப வாழ்வைக் கண்ட மாசாத்துவான் மனைவி - கோவலன் தாய், மகனையும் மருமகளையும் தனிமனைக்கண் வாழவைத்து; அவர்கள் இல்லறத்தை இனிது நடத்துவதைக் காண வேண்டுமெனப் பேராவல் கொண்டாள். பல வகைச் செல்வமொடு பணியாட்களும் கொடுத்துத் தனி மாளிகையில் தங்கச் செய்தாள்.
"அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும்"
ஆகிய சிறந்த அறங்களை ஆற்றுதற்குரிய இல்லறத்தை எல்லோரும் போற்றும் வகையில் சில்லாண்டுகள் கோவலனும், கண்ணகியும் குதூகலமாய் நடத்தினார்கள்.