பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கண்ணாயிரத்தின்

[வீராயி கசிந்துருகி, கணவன் காலைத் தொட்டு கும்பிடுகிறாள். தன்னை உத்தமி என்றும், புண்யவதி என்றும் கொண்டாடும் அளவு தன்னிடம் பாசம் கொண்டவராக இருப்பது அவளுக்கு ஒரு பெருமிதம் தருகிறது. ஒரு அதிகாரி எதிரில், எத்தனை உருக்கத்துடன் தன்னைப்பற்றித் தன் கணவன் பேசினார் என்பதை எண்ணி வீராயி பெருமிதம் கொண்டாள். சொத்து தேடிக் கொடுக்க வேண்டாம், சுகவாழ்வு அமைத்துத் தரவேண்டாம், இதயத்தில் ஏற்றமான ஒரு இடம் கொடுத்திருக்கிறாரே அது போதும். ஒரு மாதுக்கு இதைவிட மதிப்பும் மகிழ்ச்சியும் தரத்தக்கது வேறு என்ன இருக்க முடியும் என்று எண்ணினாள். 'கேட்டீர்களா! கேட்டீர்களா! புருஷன் என்னைப்பற்றி என்னென்ன புகழ்ந்து பேசுகிறார் என்று கேட்டீர்களா? என்னை உத்தமி என்றார், குணவதி என்றார்! புண்யவதி என்றார்! என்னை தொடுபவன் கையை ஒடித்துவிடுவேன் என்றார். என்னிடம் அவருக்கு அவ்வளவு அன்பு, பாசம்...நான் பாக்யசாலி! என்று ஊராரை அழைத்துக் கூறிடலாம்போல தோன்றிற்று. ஒருகணம், போலீஸ் வந்திருக்கிறதே-- ஆபத்து தந்திருக்கிறதே என்பதைக்கூட மறந்துவிட்டாள்.]

வீராயி: போதுமுங்க...உங்களோட மனசு தெரிஞ்சி என் மனம் பூரிச்சுப் போச்சிங்க...

[இன்ஸ்பெக்டரிடம்...]

ஐயா! அவர் என் பேரிலே இருக்கிற அன்பினாலே அப்படிப் பேசினார்...நான்தான்யா திருடினேன்.

கரு : (பதறி) வீராயி! வீராயி! வேண்டாம்! எனக்காக நீ செய்ததெல்லாம் போதும்...இது வேண்டாம்

வீராயி: நீங்க சும்மா இருங்க...நான்தான் திருடினேன்...நான்தான்!

[கருப்பன் தலையில் அடித்துக் கொள்கிறான். 'ஐயோ! ஐயோ! வீராயி!' என்று கதறுகிறான். போலீஸ்காரர் வீராயியை, 'நட! நட!' என்று விரட்டக் கண்டு கருப்பன் ஆத்திரமடைந்து அவன்மீது பாய்ந்து...]