8
களத்து மேடு
காத்தாஞ் செட்டி சவுக்கைத் தோப்பை அண்டியதும், காலிலே ஏதோ இடறவே, ஏது காணத் துடித்தவளாக, குடத்தை இடுப்பில் வாங்கிக் கொண்டு குனிந்தாள் தைலம்மை.
வறுமை ஒருருக் கொண்ட பாங்கினிலே பெண் ஒருத்தி எலும்புந்தோலுமாக மண்ணில் சாய்ந்திருந்தாள். தண்ணீர் தெளிக்கப்பட்டது. மயக்கம் தெளியும் குறி கண்டது. மூச்சு இரைத்தது. வாழ்க்கையின் ஓட்டப்பந்தயத்தில் தலைகால் புரியாமல் தட்டுக்கெட்டு அலைந்த அலைச்சலின் களைப்புத்தான் அப்படி மூச்சை இயக்கிற்றோ, என்னவோ?....
"ஆத்தா!...."
தைலம்மை, அனுதாபத்துக்குரியவளை அனுதாபத்துடன் அழைத்தாள். அவள் இமைகள் நெகிழ்ந்து நனைந்தன.
"தா...யே!"- பதிலுக்குக் குரல், தாயாக மதித்தவளையே தாயாக்கினாள். பாசம் உறவு கடந்ததல்லவா, லோகமாதாவைப் போன்று!
காலமும் தொலையும் கண்ணாமூச்சி ஆடின.
அபலைக்குச் சோறு படைத்தான் தைலம்மை.
"தாயே, ஒனக்குச் சாமி. ஒண்ணும் குறை வைக்க மாட்டாதம்மா!" தைலம்மையை விழுங்கிவிடுபவளாக ஏன் அப்படிப் பார்க்க வேண்டும்?....
தைலம்மையின் கண்கள், இதயத்தை ஒத்து நிரம்பின. "ஒங்க பேரு என்னாங்க?" என்று கேட்டாள்.
"தாயே, இந்த நாதியத்தவளோட ஊரு, பேரு, கதை, காரணம் எல்லாம் எதுக்கம்மா ஒனக்கு?... நான் போயிட்டு வாரேன்! தெய்வத்தை நினைச்சாலும், நினைக்காங்காட்டியும் தெனைக்கும் ஒன்னை மனசார நினைக்க மறக்க