144
களத்து மேடு
"இப்ப விளங்குறது போதும். இதுக்கு ஒன் வாழ்த்து தேவையில்லே எனக்கு!"
உடையப்பன் போனதும் வந்ததுமாகத் திரும்பி, பாக்கிப் பணத்தை பைசாப்படி கொண்டு வந்தான். நீட்டினான். தாலியை வாங்கிக் கொண்டான். "ஒங்களை விட ஒங்க தம்பி எம்புட்டோ தங்கமான ஆளுங்க!” என்று வியாக்கியானம் செய்தான் உடையப்பன்.
"அவனுக்கு புதையல் கிதையல் கிடைச்சிருக்கும். அதான் அவன் தங்கமாவும் வெள்ளியாவும் இருக்கான் போல!" என்று ஏகத்தாளமாக வார்த்தைகளை அடுக்கினார் சேர்வை.
"ஆமாங்க, அவரோட குணத்துக்கு அவருக்குக் காலம் பற அவர் உழுத நிலத்து மண்ணிலே புதையல்தானுங்க கிடைச்சுதாம்!" என்றான் உடையப்பன்.
"அப்படியா?" என்று வாயில் ஈ புகுந்தது கூடத் தெரியாமல் மலைத்துப் போனார் 'வேனா'!...
உடையப்பன் அவரது அத்துமீறிய திகைப்பை அளக்கும் நிலையில் இல்லை. ஆகவே அவன் தலை மறைந்தது.
"அப்பா!" என்று அலட்டிய தைலி தன் தந்தையை இம்மண்ணுக்குக் கொணர்ந்து நிறுத்தினாள்.
அவர் விழித்துப் பார்த்தார். மகள் வைத்திருந்த பைகள் இரண்டும் குடைராட்டினம் சுற்றின. மனம் 'சடுகுடு' ஆடியது. "ஆத்தா, இதுக ரெண்டிலே எதைத் திருநாளைக்கு உடுத்திக்கிடப்போறே?" என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுகிற அமைப்புடன் துருவினார் முதியவர்