களத்து மேடு
13
ஒங்க பொண்ணு பேரிலே நீங்க வச்சிருக்கிற பாசம் ஊர் ஒலகம் அறிஞ்சதாச்சே? வாங்க, மூஞ்சியைக் கழுவிக்கிட்டு!”
சேர்வை வெற்றிப் பெருமிதத்தினைப் புன்னகையாக்கிக் கொண்டு எழுந்தார் ; நெட்டி பறித்தார் ; கை முடிச்சை எடுத்தார்.
“முடிச்சை மாந்தளைப் பொட்ட கத்திலே வைச்சிடட்டுமா?”
“நீ போயி சோத்தைக்கொட்டி ஆறவை, சருவச் சட்டியிலே. நான் முடிச்சை வச்சிட்டு வாரேன்!”
‘முடிச்சிலே மாப்புள்ளையைவிட ஒசத்தியா என்னா குந்தியிருக்குது”. தந்தையின் போக்கு இப்போதும் ஒரு ‘வகை’யாக இருந்தது. ‘பத்து ஊருத்தண்ணி குடிச்சவுக அப்பாரு... பத்தாயிரம் பேருக்குத் தண்ணிகாட்டினவுக அவுக. இப்பிடிப்பட்டவுக, ஆயி செத்த இம்மாம் காலமாய், -இந்தப் பத்து வருசமா-என்னைக் கட்டிக்காக்க வேணுங்கிற ஒரே குறிப்போடே ஒத்தைக்காலிலே நின்னு என்னை ஆளாக்கிப்பட்டாங்க! அவுக மனசு இஷ்டப்படி நடக்கிறதைத் தவிர, எனக்கு வேறே நெனைப்பு வரவேபுடாது!... அது எம்புட்டுக் கடமை! ஆமா!’
குறிஞ்சிப்பாடி வட்டியைக் கழுவினாள். வெஞ்சினைத் தட்டும் தயாராயிற்று. சோறு ஆவி பறந்தது. ஆக்கின குழம்பு மணத்தது. அடுப்பில் சுட்ட ‘கும்மளான் கருவாட்டுப் பொடி’ வாசனை தூவியது. வாய்க்கு உணக்கையாக வேளா வேளைக்கு ஏதாவது ‘கவுச்சி’ இருக்கவேண்டும் சேர்வைக்கு !
அடுப்படியைப் பிரிந்து நடுக் கூடத்தை அண்டி வாசற் பகுதிக்குக் கண்ணோட்டம் சமைத்து, அப்பனை அழைத்