களத்து மேடு
53
ஒண்னும் கெடும்பு இல்லையே! நாளைய பின்னைக்கு...ஒரு நல்லது நடக்கிறதின்னு ஒரு முடிவு உண்டாக்கிடுச்சின்னாத் தான், பேரைச் சொல்லுறதுக்கு ரோசிக்கவேனும்!...என்று மிகவும் வெள்ளையாகச் சொல்லிவிட்டுத் தன் பேச்சில் தானே சிரிப்பைக் கண்டவனாகப் புன்னகை பூத்தான்.
இப்பேச்சைக் கேட்டதுதான் தாமதம், அவள் கணப்பைத் தொட்டவளாகத் துடித்தாள்! ‘ஐயோ...இது என்ன சோதனை!...பாவம், இந்த அயித்தை மகனுக்கு இங்கணே நடந்த தாக்கல் தகவல் எதுவும் காதுக்கு விழுந்திருக்காது போலத் தோணுது!...ம்...சின்ன வாண்டாக இருக்கையிலே அக்கரைக்குப் போனவுக இப்பத்தானே இங்கிட்டு திரும்பியிருக்காக!...அதுக்கு ஊடாலே அவுகளைப் பெத்தவுகளும் கண்ணை மூடிக்கிட்டாகளே!...’ எண்ணங்களின் முடிவில் அவள் அவனைப் பார்த்து ஒப்புக்கு பதிலுக்குச் சிரித்து வைத்தாள் .
அவனுடைய கண்கள் கனவின் ஆனந்தத்தில் மிதந்தன.
பாவம்!...
அந்தப்பெண்ணின் கன்னக் கதுப்புக்களில் சிந்தூரம் கொஞ்சத் தலைப்பட்டது.
சிங்காரம் வாசற்புறத்தை நோக்கினான். யாரோ செம்மறியை இழுபறியாகப் பற்றிச்செல்ல, செம்மறி காட்டுக் கூச்சல் போட்டது.
நான் போயிட்டு மறுகா வாரேன்!...” என்றான் அவன்.
“இருங்க, ஒருவாய் சுடுசோறு போட்டுக்கிட்டுப் பறியலாமுங்க” என்று அன்பின் உணர்வுடன் வேண்டுதல் விடுத்தாள்.