களத்து மேடு
91
“ஆத்தா?” என்று மகளை வரவேற்றார் சேர்வை. அவரது சுருங்கியிருந்த முகத்திரையில், சுருக்கங்கள் தோன்றாத அளவுக்குச் சந்தோஷம் தோன்றத் தொடங்கியது.
“அப்பா, தூங்கி முழிச்சிட்டீங்களா?”
“முழிச்சிட்டேன், ஆத்தா! ஆனா, தூங்கத்தான் முடியலை!”
“ஏம்ப்பா அப்பிடி?”
“மண்டை உள்ளாட்டுக்கும் சளி இருக்குமின்னு சொல்லு வாங்க எங்க அப்பன்காரர்–அதான், உங்க ஐயா!... அது கணக்கிலே, மனசு உள்ள பரியந்தம் கவலையும் இருக்கும். இல்லையாம்மா?...”
“நீங்க எதுக்கும் கவலைப் படவேண்டிய தேவை இல்லீங்களே, அப்பா?”
“நீ விதரணை புரிஞ்ச பொண்ணு. ஆனாலும், எங்க வலை எனக்குத்தான் ஆத்தா புரியமுடியும்!”
“ரொம்ப அதிசயமா இருக்குங்களே ஒங்க பேச்சு?...... சொத்து, சுகம், நிலம், நீச்சு இப்படி எல்லாவகையிலேயும் நீங்க புத்திசத்தியோடதான் இருக்கீங்களே, அப்பாலே எப்படியுங்க ஒங்களுக்குக் கவலை அண்ட ஏலும்........”
“ஒன் அப்பனைப்பத்தின நடப்புகளை நீ அறிஞ்சிருந்தாக்க, நீ இப்படி அதிசயப்பட்டிருக்கமாட்டே, ஆத்தா!” என்று தான் அருமைப்புதல்வியிடம் வெள்ளையாகச் சொல்லி விடத் துடித்தது அவரது மனச்சாட்சி. ஆனால், அவரது வழக்கமான மனிதமனம் அக்கொள்கைக்குப் பிடிப்புக் கொடுக்க ஒப்ப மறுத்தது. மீளவும் திரை மறைவில் ஒண்டி ஒடுங்க அவர் விரும்பினார். ஆகவே மகளின் அதிசயத்தை அடைக்கும் வகையில் அவர் பேச்சை மடைதிருப்பி விட்டு