மயிலை சீனி வேங்கடசாமி 74
சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.
அவிநயப் புறனடை என்றும் நாலடி நாற்பது என்றும் பெயருள்ள இன்னொரு நூலை அவிநயனாரே எழுதியுள்ளார். இந்நூலும் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. இந்நூற் செய்யுட்கள் சில உரையாசிரியர்களால் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.[1]
காக்கைபாடினியம்
இந்த யாப்பிலக்கண நூலை எழுதியவர் காக்கைபாடினியார், காக்கை பாடினியார் என்றும் பெயருள்ளவர் இருவர் இருந்தனர். குறுந்தொகை 210-ம் செய்யுளையும், புறநானூறு 278-ஆம் செய்யுளையும், பதிற்றுப்பத்து ஆறாம்பத்தையும் பாடினவர் சங்ககாலத்துக் காக்கைபாடினியார். காக்கைபாடினியம் என்னும் செய்யுளிலக்கண நூலை எழுதிய இவர் பிற்காலத்திலிருந்த காக்கைபாடினியார். சிறு காக்கை பாடினியம் என்று இன்னொரு யாப்பிலக்கண நூலும் உண்டு. இந்த நூலை எழுதியவர் சிறுகாக்கைப் பாடினியார். இந்த இரண்டு செய்யுளிலக்கண நூல்களிலிருந்து சூத்திரங்களைப் பிற்காலத்து உரையாசிரியர் தங்களுடைய உரையில் மேற்கொள் காட்டியுள்ளனர்.[2]
நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு என்னும் செய்யுள் இலக்கண நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தம்முடைய உரையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒரே நூலாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த நக்கீரர் சங்க காலத்து நக்கீரர் அல்லர், பிற்காலத்தில் (பக்தி இயக்கம் தோன்றின காலத்தில்) இருந்த நக்கீரர் என்று தோன்றுகிறார்.
நத்தத்தம்
இப்பெயருள்ள செய்யுள் இலக்கண நூலை இயற்றியவர் நத்தத்தனார். (இவர் பெயர் நற்றத்தனார் என்றும் இவருடை நூல் நற்றத்தம் என்றும் கூறப்படுகிறது). தத்தனார் என்பது இவருடைய பெயர் என்பதும் ந என்றும் சொல் சிறப்புப் பெயரை உணர்த்துகிறது என்றும் தோன்றுகிறது. இந்த நூலும் மறைந்து போயிற்று. இந்நூலிலிருந்து சில சூத்திரங்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை உரைகளில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன.[3]
பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை
இந்த இரண்டு யாப்பிலக்கண நூல்களை எழுதியவர் பல்காப்பியனார். இந்த நூல்கள் பிற்காலத்தில் மறைந்துபோயின. இந்நூல்களிலிருந்து சில சூத்திரங்கள் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.[4]