பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97. மறைத்து வைத்தோம்


இறவனைக் காண்பது யாவருக்கும் எளிதன்று. அவன் நுட்பத்திலும் நுட்பமான பொருள். அணுவுக்கும் அணுவாய்க் கலந்து உறைபவன். அவன் இல்லாத இடம் ஏதும் இல்லையாயினும் அவனை நம்மால் காணமுடிவதில்லை. அவனைக் காண வல்லவர் யார்?

ஆர்வல்லார் காண அரன் அவனை?

என்று காரைக்காலம்மையார் ஒரு வினாவை எழுப்புகிறார். அவன் சர்வாந்தர்யாமியாய் மறைந்து நிற்பதனால் நம்மால் காண முடியவில்லை என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அதற்கு வேறொரு காரணத்தை அம்மையார் சொல்கிறார்.

அருமையான மாணிக்கமொன்றை ஒருவன் மிக அரிதில் பெற்றான். அதை யாவரும் காண வெளியில் வைப்பானா? அதைத் துணியில் கட்டிப் பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டிப் பாதுகாப்பான். அருமையான பொருள்களை யாரும் அறியாமல் இரகசியமாகப் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் போற்றுவது உலகத்தார் இயல்பு. ‘நான் எவ்வளவோ ஜாக்கிரதையாகப் பதுக்கிப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதை யார் காணமுடியும்?’ என்று அந்த மாமணியை வைத்திருப்பவன் சொல்வதுபோல அம்மையார் சொல்கிறார்.

ஆர்வல்லார் காண அரனவனை?

என்று தொடங்கியவர், அவ்வாறு காண முடியாமைக்கு உரிய காரணத்தைச் சொல்கிறார். ‘அந்த மாணிக்கத்தைத் துணியினாலே மூடிப் பெட்டிக்குள் வைத்திருக்கிறேன்’ என்று

நா—36