பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582

உரையினால் இம்மாலை
அந்தாதி வெண்பாக்
கரை வினால் காரைக்காற்
பேய்சொல்-பரவுவார்
ஆராத அன்பினோடு
அண்ணலைச்சென்று ஏத்துவார்,
பேராத காதல் பிறந்து.

‘இந்த வெண்பா அந்தாதி மாலையாகிய காரைக்கால் பேயின் சொல்லைத் தம்முடைய வாக்கினால் மனக்கசிவோடு சொல்லி இறைவனைத் துதிக்கும் அன்பர்கள், என்றும் அடங்காத அன்போடு, என்றும் நீங்காத பக்தி பிறந்து, இறைவனிடம் சென்று துதித்துக் கொண்டே இருப்பார்கள்.’

[உரையினால்-வாயினால்; ஆகுபெயர். மாலை அந்தாதி வெண்பா - வெண்பா அந்தாதி மாலை. கரைவு—மனக்கசிவு; நெகிழ்ச்சி. கரைவினால் - கரைவோடு, வெண்பாவாகிய காரைக்காற் பேய் சொல் என்று கூட்டுக. பரவுவார்-துதிப்பவர். ஆராத-தெவிட்டாத; இதோடு போதும் என்ற அமைதி உண்டாகாத, அன்பு என்றது பக்தியை; அந்த அன்பே இன்பமாக இருக்கும். அண்ணல்-பெருமையை உடையவன். சென்று என்றது இறைவனிடம் சென்று என்று பொருள் கொள்ளுவதற்குரியது. இது சாமீப்பிய பதவியைக் குறித்தது. அண்ணலை-அண்ணலிடம்: உருபு மயக்கம். ’சென்று அண்ணலை ஏத்துவார்' என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். அன்பு முறுகிக் காதல் பிறக்கும்.

"எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய'

என்று இவ்விரண்டையும் கம்பராமாயணம் கூறுவது காண்க.