பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

காளிதாசன் உவமைகள்


தோளாத மணியைப் பயன்படுத்த முடியாது; அம் மணியைச் சாணை பிடித்துத் தொளையிட்டு உள்ள அமைத்துக்கொள்ள இயலும். ர.1:4

பெரிய கப்பல்கள் கடலை ஒட்டிய ஆறுகளிலோ, கழி களிலோ கட்டப்படுகின்றன. கப்பலைக் கட்டி முடித்தபின், அதை ஆற்றிலோ, கழியிலோ இறக்கி விடுவார்கள்; அது ஆற்றிலும் கழியிலும் ஒடிப் பழகியே கடலைச் சேரவேண்டும்.

மொழியைக் கற்பவன் முதலில் கற்பது எழுத்து. ஒலி வடிவத்திலும், வரிவடிவத்திலும் எழுத்தைக் கற்றபின்பே சொல், பொருள், யாப்பு, முதலானவற்றைக் கற்க வேண்டும். இரகு எழுத்து என்னும் கழியைக் கடந்தே மொழி என்னும் கடலில் நுழைந்தான். கு. 3:28

சொல் எழுத்துத் தொகுதி; பொருளோடு இணைந்தாலே சொல் பயன் பெறும். சொல் உடல்; பொருள் உயிர். சொல் உருவம் உடையது; சொல்லோடு இணைந்தே பொருள் அறியப்படுவது. பொருளோடு புணர்ந்த சொல்லே வல்லமை உள்ளது. அச்சேர்க்கையே அறிவைத் தோற்றுவிக்கும்; வளர்க்கும்; செயலுக்குரிய இயக்கம் தரும்.

உமை சொல்; சிவன் பொருள், அவர்களுடைய கூடலே 'யோகம்'; அது உலகுக்குப் பயன் தரும். அக்கூடலைக் கண்டு உமையின் தந்தை இமவான் மனநிறைவு பெற்றான்.

உமையும் சிவனும் இமயச் சாரலில் காமப் புதுமணவின் தேறலை மாந்தினர். மலைச்சிகரங்களின் அழகு பின்னணி செய்தது. அவ்வப்போது அவர்கள் இமய நகரம் வந்தனர். இமவானுடைய மனைவி, மேனா, தன் மகளுடைய நலம் மருமகனால் துய்க்கப்படுவதைக்கண்டு மகிழ்ந்தாள்; சற்று நாணம், கோட்டிய கடைக்கண் நோக்கு, உதடுகளிலும் கழுத்திலும் பற்குறி, நகக்குறிகள் ஆகிய இவற்றைக் கண்டாள். மகளுடைய இளமையும் எழிலும் காதலனுடன் துய்ப்பிலேயன்றி வேறு எங்கு பொலிந்து விளங்கும்? தன் மகளுடைய நலம் நன்கு துய்க்கப்பட்டாலன்றி தாய் மனநிறைவு பெறுவது எங்ங்னம்? கு. 6:79; 8:12