பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


னுக்குத் தீக்கை செய்த உமாபதி சிவத்தின் அருளிப் பாடும் நினைக்கத் தக்கது. ஆயினும் உழுதசால் வழிச் செல்லும் நம்மவர்கள் திருமுறை நெறியையும் மெய்கண்ட நெறியையும் ஏற்று நடைமுறைப் படுத்தவில்லை. ஆதலால் நமது சுதந்திர இந்திய அரசு, ஆலயப் பிரவேசச் சட்டம் செய்தது. இது சிவாகமங்களுக்கு விரோதமானதுதான். இதனை நாம் ஏற்காமல் இல்லை. இங்ஙனம் தாழ்த்தப்பெற்றவர்கள் திருக்கோயிலுக்கு வந்ததால் - “திருவருள் பொலிவு (சாந்நித்யம்) குறைந்து இருக்கிறது” என்று சிலர் கூறுவது சரியன்று. இறைவன் எஞ்சாத பூரணம், குறைவிலா நிறைவு; கோதிலா அமுது. அதற்கு எப்படிக் குறை வரமுடியும்? இது சொல்வாருடைய மனப்போக்கின் கருத்தேயாம். சாதாரணக் காவிரியே, தூய்மையற்றவைகளையும் தூய்மையாக்கிக் கொள்ளும் பொழுது, இறைவனைத் தாழ்த்தப்பட்டவர்கள் தொடுவதால் திருவருட் பொலிவு குறையாது. அப்படிச் சொல்லுபவர்கள் கடவுள் தத்துவத்தை முற்றாக அறிந்தவர்கள் ஆகமாட்டார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது32 எந்த வகையிலும் நமது சமுதாயத்தில் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வுகளைக் கற்பிப்பதும் ஒரு சாராரை இழிவுபடுத்துவதும், மற்ற மதங்களுக்கு அனுப்பிக்கும் கொடுமையும் உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும். “மெய்வைத்த சொல்” என்றும் “மறை” என்றும் பாராட்டப்பெறும் திருக்குறள் கூறும் பொதுநெறி33 காணல் இந்த நூற்றாண்டின் கடமை.

ஆதலால், இன்றைய நிலையில் அரசு ஒரு தக்க சமயவளர்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டைக் கூட்டி, மேலும் சரியான முறையில் இச்செய்தியை அணுகி திருமுறைகளுக்கும், மெய்கண்ட சாத்திரங்களுக்கும், சிவாகமங்களுக்கும் முரணில்லாமல் சிந்தித்துக் கருத்தாய்வு செய்து செயற்படுத்துவது தவறாகாது.

அங்ஙனம் செய்ய நினைக்கும் பொழுது வழிவழியாக பூசை செய்துவரும் சிவாச்சாரியார்களைக் கவனத்தில்