பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நம்பிக்கை, ஒத்து வாழ்தல் ஆகிய நெறியில் வாழக் கல்வி துணை செய்யும்.

கல்வி முயற்சி பலமுனை முயற்சியாகும். கல்விக் களம் பெற்றோர், மாணவர், ஆசிரியர், சமூகம் என விரிவாகப் பரந்து கிடக்கிறது. இதில் முதல் நிலையில் உள்ள பெற்றோர்கள் நமது கல்வித்துறைக்கு வாய்ப்பாக அமையாதது ஒரு பெருங்குறை. ஏன் எனின், நமது நாட்டின் பெற்றோர்களில் பலர், எழுத்தறிவு இல்லாதவர்கள். இவர்களில் பலர் விபத்துக்களின் காரணமாகப் பெற்றோர்களானவர்கள். இவர்களுக்குக் குழந்தைகள் வளர்ச்சியில் போதிய அளவு அறிவியல் சார்ந்த ஆர்வம் இல்லை. ஆதலால் இவர்களை நம்பி நாம் கல்விப் பயிரை வளர்க்க முடியாது. அடுத்து, மாணாக்கர்கள், இவர்கள் நல்லவர்கள்! எழுதப்படாத கரும்பலகை போன்றவர்கள். சமூகம்... குறிப்பாக அரசியல் ஊடாடாத வரையில் மாணவர் உலகம், நல்ல உலகமே! அடுத்து நமது கவனத்திற்குரிய பொறுப்புள்ள உறுப்பு ஆசிரியர் இனம். ஆம்! ஆசிரியர்கள். நமது சமுதாயத்தின் முன்னோடிகள்; மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்! நாம் அனைவரும் ஆசிரியரிடமிருந்தே கற்றுக் கொள்கின்றோம். ஆசிரியர் என்போர் போதிப்பவர் மட்டுமல்லர். ஆசிரியரின் வாழ்க்கையே ஒரு நூல் போன்றது. நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறோமோ அவர்தான் ஆசிரியர். இளந் தலைமுறையினரின் அறிவு வளர நல்ல ஆசிரியர்கள் வேண்டும். ஆம்! கல்வியின் பொறுப்பு ஆசிரியர்களிடமே பெரும்பான்மையும் இருக்கிறது. ஒரு சிறந்த ஆசிரியர் தன்னிடம் ஒப்படைக்கப்பெறும் மாணவர்களின் உள்ளத்தினை ஆலோசித்து நின்று அற்புதமாக உருவாக்குகிறார். அதனால் சமூகத்தின் வரலாற்றில் ஆசிரியர்களுக்கு உள்ள இடம் மிகமிக உயர்ந்தது. ஆனால், இன்றைய நமது சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு நமது மாணவர்கள், பெற்றோர்கள் கொடுக்கும் இடம் அவ்வளவு சிறப்பாக இல்லை.