பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

115



விதியை நிர்ணயிப்பது எது?

இந்திய தத்துவ ஞானத்தில் ஊழ் - விதி என்பது மேலாதிக்கம் செய்வது ‘விதி’ என்பது என்ன? வீதி - விதி என்னும் சொற்களை ஒப்புநோக்கிப் பொருள் கொள்க. பலகாலும் பலரும் நடப்பது வீதி. பலகாலும் பலரும் தனி மனிதரும் பழகுவது விதி - ஊழ் விதி, வாழ்க்கையின் துறைதோறும் உண்டு! விதி பற்றி எண்ணுவது தவறில்லை. ஆனால், விதி மாற்ற முடியாதது என்ற கருத்து ஏற்புடைய தன்று. விதி, பழக்கங்களால் வழக்கங்களால் ஆவது. மனிதன் பழக்கங்களின் வயப்பட்ட பிராணி என்று சொல்லும் வழக்குண்டு. பழக்கங்கள் மனிதன் எடுத்துக் கொள்பவை; எளிதில் கைவிடக்கூடியவை. பழக்கத்தின் முதிர்ச்சி வழக்கங்கள்! வழக்கங்கள் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையன. மனிதன் எளிதில் வழக்கங்களிலிருந்து மீளான். இந்த வழக்கங்களை ‘விதி’ என்றும் கூறலாம். ஆக, மனிதனின் பழக்கங்கள் வழக்கங்கள் ஆகின்றன. வழக்கங்கள் விதிகள் ஆகின்றன.

இந்த விதிகள், சிந்திக்க மறுக்கும் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்பது ஒரு நம்பிக்கை, இவையெல்லாம் உண்மையும் கூட. நாளும் மனிதன் தன்னைப் புத்துயிர்ப்புச் செய்து கொள்வனாயின் விதி மேலாதிக்கம் செய்யாது. நேற்றைய தவறுகளைத் திருத்திக் கொள்ளத்தானே இன்றைய வாழ்க்கை. விதி மாற்ற இயலாதது என்ற கருத்து ஆட்சேபனைக்குரியது; ஆய்வுக் குரியது. விதியின் அமைவை மாற்ற முடியாதெனில் பிறப்பு ஏன்? அறிவு ஏன்? கடவுள் ஏன்? மனிதனின் விதியை மனிதனே நிர்ணயிக்கிறான்; முடிவு செய்கிறான். அவரவர் செய்த செயற்பயனை அவரவரே துய்ப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளாமல் முறைப்படுத்துவது நியதி. இந்த நியதி ஒரு மேலாண்மையின் வழி விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்யப்படுகிறது.