பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

145


என்றார். ஏன்? ஏதுக்களுக்குப் பொருள் காண்பதும் எடுத்த மொழியாளர் அறிவும் எல்லைக்குட்பட்டவை என்பதால் விலக்கினார். இறைவனைக் காணும் அறிவே அறிவு என்பதை

"அறிவு தந்தெனை ஆண்டு கொண்டருளிய

அற்புதம் அறியேன்!”

என்ற திருவாசகம் உணர்க. உயிர் நிறைநலம் பெறுதலே வாழ்க்கையின் நோக்கம்; குறிக்கோள். அந்த நிறைநலமாகிய இன்ப அன்பினை நோக்கித் தொடங்கிய பயணமே வாழ்க்கை.

இன்றோ சமயவியல் அறிவியலாக விளங்காமல் மூடத்தனம் நிறைந்த கொள்கைகள், கோட்பாடுகள், பழக்கங்கள், வழக்கங்கள், சடங்குகள் நிறைந்து பயனற்றுப் போனதோடன்றி. நம்முடைய காலத்தையும் ஆற்றலையும் செல்வத்தையும் கொள்ளையடிக்கின்றது. இது மட்டுமா? மனிதத்தை முட்டாளாக்கிப் பயமுறுத்தி கடவுள் கோபம் என்றும் சொல்லி வாழ்க்கையைக் கெடுக்கின்றது.

கடவுள் ஒருவர் தான்! ஒருவரே தான்! சத்தியமாக வேறு ஒரு கடவுள் இல்லை! இதுவே உண்மை. ஒரே கடவுளை வணங்கும் மாந்தர்களிடையே மதங்களைப் படைத்து, வேற்றுமையை வளர்த்து, பகைமையை மூட்டி இந்தப் புவியைக் கலகக் காடாக்கி வருகின்றனர். இதுவல்ல சமயம் சமயம் ஒரு சிறந்த அறிவியலுள் சிறந்த அறிவியலாகும். குறைவிலா நிறைவாக, கோதிலா அமுதாக, அறிவுக்கு அறிவாக, நன்றாக, இன்பமாக விளங்கும் பரம்பொருள் நெறி நின்று எண்ணி வாழ்தல் மூலம் உயிர்கள் தாமும் நிறைநலம் பெறுதலே சமயவியல். இத்தகு சமயவியல் அறிவு மக்களைச் சென்றடையாதவரை மக்கள் ஞானம் பெறமாட்டார்கள். இந்த மண்ணகம் விண்ணகமாகாது.