பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருந்தார். "புளியம்பழம் ஒத்திருந்தேன்” என்று அவரே பேசுகின்றார்.

புளியம்பிஞ்சுபோல் இருப்பவர்கள் மனித விலங்குகள் புளியங்காய்போல் இருப்பவர்கள் மனிதர்கள். புளியம்பழம் போல் இருப்பவர்கள் ஞானிகள். புளியம் பிஞ்சு தோற்றமிருக்கும். ஆனால் பயன்படக்கூடிய சத்து ஒன்றும் உள்ளே இருக்காது. அதேபோல பலரிடத்து மனித உருவமிருக்கும், ஆனால் மனித சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மனிதப் பண்பு இருக்காது. காயில் பசையிருக்கும். ஆனாலும் புளிக்கும் அதுமட்டுமின்றி, ஓடும் பசையும் ஒட்டிக்கொண்டிருக்கும். அதே போல காய்போன்ற மனிதர்கள் தன்னலப்பற்று மிக்குடையவர்களாக இருப்பர்... மற்றவர்களுக்குப் புளித்த வாழ்க்கை நடத்துவர். பழம் சுவையுடையதாக இருக்கும்; ஓடும் உட்பகுதியும் பற்றற்ற நிலையில் தொடர்பு கொண்டிருக்கும். பழம்போன்ற மனிதர்கள் மற்றவர்கட்கு இன்பந் தரத்தக்க விதத்தில் வாழ்வார்கள், தன்னலப் பற்றின்றி வாழ்வார்கள்.

மாணிக்கவாசகர், இறைவனைத் தினையளவு நேரம் கூடப் பிரிந்திருக்க முடியவில்லை என்பதனைத் "தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பன்று" என்று பேசுகின்றார். எம்பெருமானை ஆட்கொண்ட இறைவன், அவரை விட்டுச் சென்றார். இறைவனைப் பிரிந்த இப்பிரிவுத் துயர் திருவாசகம் முழுவதிலும் சாறாக ஓடியிருக்கிறது. இப்பிரிவின்றேல் திருவாசகம் பிறந்திருக்காது. மாணிக்க வாசகரிடம் சொற்கள் வந்து ஏவல் செய்திருக்கின்றன.

"கோதாட்டி அருளும் சீலம்" என்று பேசுகின்றார். அடியார்களை ஆட்கொள்வதுதான் சீலம். அதுதான் இறைவனின் கடமைப்பாடுங்கூட. இந்தக் கடமையையும் இறைவன் கடமையாக எண்ணிச் செய்யாமல் விளை யாட்டாகவே செய்கிறோம்.