பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

189


வீட்டினை எய்துதற்குரிய வழி என்று வள்ளுவர் குறிக்கின்றார். இக்கருத்தை அடிகள்,

"மேவும் உன்தன் அடியாருள்
      விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேரும் கயற்கண்ணாள்
      பங்கா உன்தன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
      பரமா னந்தப் பழங்கடல் சேர்ந்(து)
ஆவி ஆக்கை யான்எனது என்(று)
      யாதும் இன்றி அறிதலே”

என்று கூறி விளக்குகின்றார்.

இதுவரையில் வள்ளுவர் நூலின் முதல் இரண்டு பால்களைக் கொண்டு வாதவூரரது திருவாசகத்தைப் பார்த்தோம். இனி, வள்ளுவர் நூலின் இன்பத்துப் பாலையும் வாதவூரரது இன்பப் பெரு நூலாகிய திருக்கோவையாரையும் பார்ப்போம். வள்ளுவர் தமிழர் நாகரிகத்திற்கேற்ப அகனைந்திணைக்கண் பாற்பட்ட இன்பத்தைக் காமத்துப் பாலின்கண் விரித்துரைக்கின்றார். அடிகள் வாதவூரர் தமிழரின் உயர்ந்த நாகரிகத்தின் அம்சமாகிய பேரின்ப வாழ்வை அகத்துறை இலக்கணத்தில் வைத்து விளக்கிக் காட்டுகின்றார். இருப்பினும், இருவரிடையேயும் ஒத்த கருத்துகள் உண்டு என்பதை ஒரு குறளைக் கொண்டு கூறிவிட்டு முடித்துக் கொள்கிறோம்.

தலைமகனைப் பிரிந்த தலைமகள் பெரிதும் வருந்துகின்றாள். தலைவியின் துயரத்தைக் கண்ட தோழி, சிறிது நாழி மறக்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றாள். இதைக் கேட்ட தலைவி, "தலைவரை மறந்தால், நீத்தே விடவேண்டும். அப்படியல்லாது, இப்பொழுது நினைத்திருந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம்; அதனால் மறக்க மாட்டேன்," என்று கூறுகின்றாள்.