பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"இலங்கிழாய்! இன்று மறுப்பின்என் தோள்மேல்
கலம்கழியும் காரிகை நீத்து"

என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள் அப்படியே ஆண்டவன்பால் வைத்துக் கூறியிருக்கும் பாடலைப் படித்துப் படித்து இன்புற வேண்டியிருக்கிறது.

"குறப்பாவை நின்குழல் வேங்கையம்
       போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
       வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
       வந்திடிற் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
       னத்தகும் பெற்றியரே."

என்ற பாடல் படிக்கின்ற பொழுதெல்லாம் இன்ப உணர்ச்சியை வாரிவாரி வழங்குகின்றது. ஒரு தரம் புலியூரை நினையும் வாய்ப்பைப் பெற்றவர்கள், மறக்கும்படியாக ஒரு தீவினை வந்து மூண்டாலும், பல பிறப்புக்களிற் பிறந்தாலும், பின்னும் சென்று சேரத் தகும் தன்மையையுடையவர் என்பது கருத்து.

இங்ஙனமாக, வள்ளுவரும் வாதவூரரும் கடவுள் ஒருவர் உண்டு; அவர் தனக்குவமையில்லாதவர்; அவரை வணங்குதலே மானிட வாழ்வின் பயன்; அன்பும் அருளுமே செல்வம்; மற்றச் செல்வங்கள் செல்வங்களன்று, பிறவி நீங்க வேண்டும்; வீட்டின்பமே சிறந்த இன்பம் என்று ஒத்த கருத்தினராக ஓதியுள்ள மெய்ம்மொழிகளை உள்ளவாறு உணர்ந்து பயன் பெறுதலே நமது கடமை.