பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

191



9. நான் அறிவேன்

‘நான் அறிவேன்' என்றவுடன் பயப்படுகிறீர்களா? 'காட்டிக் கொடுத்து விடுவேனோ' என்று கவலைப்படுகிறீர்களா? அப்படியெல்லாம் ஒன்றும் நேரிடாது; பயப்படாதீர்கள்; தைரியமாகக் கட்டுரையைப் படியுங்கள்.

'போதாமை' என்ற மனப் பண்பு பெரும்பாலான மக்களிடையே பரவியுள்ளது. 'போதும்' என்ற பண்பு ஒரு சிலரிடத்தில்தான் உள்ளது. போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது ஏட்டளவில்தான்; செயலில் இல்லை. அதனாலன்றோ எமர்சன், "போதுமென்ற மனத்தை எவ்வாறு அடைவது என்று காட்டுவதும், எவ்வாறு இன்னும் பெருக்கிக்கொள்வது என்ற எண்ணத்தை அழிப்பதுமே தூய பெருநெறி" என்றார்.

வேண்டாமை என்னும் செருக்கு என்றார் திருவள்ளுவரும். 'ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்' என்றார் திருமூலரும். போதும் என்று திருப்தியடைந்த பூரண மனந்தான் பூரண ஐசுவரியமாகும், என்றார் நபிகள் நாயகம். போதும் என்ற மனோபாவத்தோடு பறவைகளைப் போல வாழ வேண்டும்; என்றார் மகாத்மா. ஆகவே, 'போதாமை' என்ற மனோநிலை எல்லோராலும் வெறுக்கப்படுகிறது. இன்னும் வேண்டும் என்ற இப்பிணிக்கு மருந்து நீதியும் நடுவு நிலையுமே ஆகும்.

'போதாது' என்று சொல்லுகிறவர்களிற் சிலர் இயற்கையாகவே தேவையுள்ள நிலையில் இருப்பார்கள். அவர்கள் கடமைகளைச் செய்தும் பெறவேண்டியவற்றைப் பெறாது வருந்துவார்கள். 'உழைத்ததின் பயனைக் காணோமே' என்று கவலைப்படுவார்கள். அவர்கள் நிலை இரங்கத் தக்கதொன்றே யாம்.