பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

201


இறுதியில் உயிர்யாவும்
         ஒன்றே யென
அறிதல் வேண்டும் அஃ(து)
         உண்மைய தாகுமே"

என்று பேசுகிறார். இறுதியில் உயிர்யாவும் ஒன்றே என்ற உறுதிப்பாடு, "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் கருத்தைச் சிறந்ததொரு விளக்கமாக இல்லையா?

உலகியல் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்ன என்பதை இன்று அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வது போலவே, அன்று நமது கச்சியப்ப சிவாசாரியார் ஆராய்ந்திருக்கிறார். அவரவர் செய்த செயல்களால் தீமையும் நன்மையும் அவரவரை வந்தடைகின்றனவே யொழிய மற்றவர்களால் நமக்குத் தீமையும் நன்மையும் வருவதில்லை-பிறர்தர வருவனவுமல்ல என்கிறார் அதுமட்டுமா? அதற்கு ஆதாரமாக, இன்னொரு அருமையான கேள்வியையும் கேட்கிறார். அமுதம் இருக்கிறது. அந்த அமுதத்திற்குச் சுவை கொடுத்தவர் யார்? நஞ்சு இருக்கிறது. அதற்குத் தனிச்சுவை வழங்கியவர் யார்? என்று கேட்கிறார். தீதும் நன்றும் பிறர் தர வாரா- அவரவர் வினைவழி அவரவர் என்ற கருத்தை நமது கச்சியப்ப சிவாசாரியார் வலியுறுத்திப் பேசுகிறார்.

"தீங்குவந் தடையு மாறும்
         நன்மைதான் சேரு மாறும்
தாங்கள்செய் வினையி னாலே
         தத்தமக் காய வல்லால்
ஆங்கவை பிறரால் வாரா
         அமுதம்நஞ் சிரண்டி னுக்கும்
ஓங்கிய சுவையின் பேதம்
          உதவினார் சிலரு முண்டோ”

என்று கேட்கிறார்.