பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கை என்பது கடல் என்று முன்னமேயே குறிப்பிட்டோம். அந்த வாழ்க்கைக் கடலில் நீந்திக் கரையேற அருணகிரிக்கும், மாணிக்கவாசகருக்கும், இரண்டு புணைகள் கிடைத்தன. அருணகிரியார் மனத்திற்குத் தட்டிய ஊறி உருவெடுத்த திருவுருவம் முருகன்; மாணிக்கவாசகரின் மனத்திற்குத் தட்டிய ஊறி உருவெடுத்த திருவுருவம் சிவபெருமான்.

நாம் எதை நினைத்தாலும் ஒன்றியிருந்து நினைக்க வேண்டும். அருணகிரியாரின் ஞானம் வழிவழி ஞானம். அவர் காலத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர் என்பது இன்னொரு சிறப்பு. அவர் காலத்தில் சந்த இசைத் தமிழுக்கு நல்ல வாய்ப்பும் வரவேற்பும் இருந்தது. எனவே, அவர் சந்தத் தமிழ் பாடினார்.

அருணகிரியார் புலன்களின் வழியே முருகனை அனுபவித்தார் - பொறிகளும் அனுபவிக்கும்படி செய்தார். புலன்களை-சிந்தையைத் திருத்தும் உணர்வைப் பெற வேண்டும். அதற்கு அருணகிரியாரின் பாடல்கள் பெரிதும் உதவுவன.

தொண்டு செய்தல், வழிபாட்டுப் பாடல்களைக் - கனிவோடு பாடுதல், திருக்கோயில்களுக்குச் சென்று திருவுருவங்களை வழிபடுதல் முதலியன இன்றியமையாதன. 'தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை', என்பது நமது தமிழ் மரபு "வெற்று நிழலுக்கும் உதவா உடம்பு" என்கிறார் அருணகிரிநாதர் தொண்டின் சிறப்பைப் பற்றியும் அதன் இன்றியமையாமையைப் பற்றியும் அவர் நிறையப் பாடியிருக்கிறார். "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்" நல்லதொரு குடி வாழ்க்கையை அவர் "நெய்யின் அளவேனும் பகிர்ந்து கொடுமின்கள்" என்று வலியுறுத்துகிறார். நாளும் கோளும் அடியாரை ஒன்றும் செய்ய முடியாது என்பதனை,