பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

239


15. அருள்நெறி இயக்க வளர்ச்சி

தமிழகம் தெய்வ மணம் கமழும் திருநாடு. இறை மணம் கமழும் இன்பத் திருநாடு, அருமைத் தமிழும் அருள்நெறியும் இணைந்து வாழ்ந்த தமிழ்நாடு. இத்தகைய திருநாட்டில் இடைக்காலத்தில் சமயத்திற்கு எதிரிடையான கருத்துக்கள் பரவலாயின. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற உலகாயத நெறி தலையெடுத்தது. கடவுள் ஏது, அது வெறும் கற்பனை, மனப் பிராந்தி, திருக்கோயில்கள் எதற்கு? என்பன போன்ற நச்சுக் கருத்துக்கள் நாட்டிலே நடமாடத் தொடங்கின. இது எதிர் முகாம்நிலை. உடன்பாட்டுத் துறையிலும் கூட சமய உணர்ச்சியும், அனுபவமும், நிகழ்ச்சிகளும் அகலமாக இருந்தனவேயொழிய ஆழமாக இல்லாது போயிற்று. வாழும் சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளத் தக்கதாக சமயம் உயிரூட்டத்தோடு இல்லை, இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டில் தீய சக்திகள் வளரலாயிற்று. இதனை எண்ணி வருந்திய சில அன்பர்கள் சமய வளர்ச்சிக்கென ஒரு முறையான விரிந்த அளவில் ஒரு இயக்கத்தைக் கண்டு வேலை செய்ய வேண்டும் என்று எண்ணினர். திருவருளும் கூட்டுவித்தது. இந்த எண்ணத்திற்கு ஒரு புதிய வேகத்தைக் கொடுப்பதற்காகவே போலும் திராவிட கழகத்தலைவர் இராமசாமிப் பெரியார் அவர்கள் திருச்சியில் நடந்த தமது கழக மாநாட்டில் திருக்கோயில் திருவுருவங்களை உடைப்பதெனத் தீர்மானம் செய்தனர். முன்னைய எண்ணத்திற்கு இத் தீர்மானம் அதிக வலுவூட்டியது. இதன் பலனாக குன்றக்குடியில் 10-8-52-இல் நூற்றுக்கணக்கான அன்பர்கள் கூடினார்கள். அன்றே அருள்நெறித் திருக்கூட்டம் தொடங்கப் பெற்றது.

வேலைத் திட்டம்

சமயக் கருத்துக்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு விரிந்த எல்லையில் கிராமங்கள், நகரங்கள்