பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சைவமும், வைணவமும் சேர்ந்து வாழுகின்ற இடங்கள் இருக்குமானால் அந்தப் பகுதியிலே நாம் இந்து சமயம் என்று சொல்லலாம். வைணவமும், சைவமும் சேர்ந்து வாழ்கின்ற ஒரு கூட்டுப் பெயருக்கு இந்து சமயம் எனப் பெயர். இங்கே, நாம் பெரும்பான்மையோர் சைவர்களாக வாழ்கிறோம். திருநீறு அணிகிறார்கள். இந்தச் சமயத்திற்குச் "சைவம்" என்று எப்படிப் பெயர் வந்தது என்கிறார்கள். பொதுவாக ஒரு சமயத்திற்குப் பெயர், அதை தோற்றுவித்த கடவுளின் பெயர், அல்லது அந்தச் சமயம் எந்தக் கடவுளை, எந்தப் பெயரில் வழிபடுகிறதோ அதை வைத்து, அல்லது அந்தச் சமயத்தைத் தோற்றுவித்த ஆசிரியரின் பெயரை வைத்துதான் பெரும்பாலும் சமயங்களின் பெயர் வழங்கும்.

நம்முடைய சமயத்தைப் பொறுத்த வரையில் அதைத் தோற்றுவித்தவர்கள் கிடையாது. அது காலங் கடந்தது; பழமையானது. ஆசிரியர்கள் பலர் இதற்கு வந்தாலும் கூட, வளர்த்தவர்களே தவிர, அவர்கள் தோற்றுவித்தவர்கள் என்று சொல்லமுடியாது. நாம் வழிபடும் தெய்வத்தின் பெயர் சிவமாக, சிவபெருமானாக இருப்பதனால் சிவத்தை வழிபடுகிற சமயத்திற்கு அது எழுத்து விகாரமடைந்து 'சைவ சமயம்' என்று வந்தது. ஆக, சிவசமயமாக இருக்கிற சமயத்திற்குத் தான் சைவ சமயம் எனப் பெயர். சிவபெருமான் முழு முதற் கடவுள், அவரை வணங்குவது நம்முடைய கடமை. இப்பொழுது, நம்முடைய குழந்தைகள் பாடிய திருவாசகப் பாடலில் கூட, மூவருக்கும் அப்பாற்பட்ட தெய்வமாக-பரம் பொருளாக இருக்கிறான் என்கிறார்கள்.

இந்த சிவபெருமான் என்பவர் உலகத்திற்கு முதல்வனாகவும், எல்லார்க்கும் தலைவனாகவும் இருக்கிறார் என்பது நம்முடைய மரபு. ஆனால், பிற்காலத்தில் வந்த பழக்கங்களை வைத்து அவர்கள் கேட்டிருக்கிறார்கள். "சைவமாக இருப்பவர்கள் எல்லாம் புலால் உண்ணாமல் இருக்க வேண்டுமா?" என்று கேட்டிருக்கிறார்கள். பொது