பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/358

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனாலும், அன்பை முறைப்படுத்துவதற்கு அறிவு துணை செய்யலாம் என்றார். அதே நேரத்தில் அன்பில்லாத உயிர் வாழ்க்கை பாலைவனத்தில் பட்டமரம் தளித்தாற் போன்றது என்கின்றார். பாலைவனத்திலே தளிர்க்குமா? இன்னும் அதற்கு மேலே போய் கடுமையாக எச்சரிக்கின்றார் திருவள்ளுவர்.

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்”

என்கின்றார் திருவள்ளுவர். ஆம். அறக்கடவுள் சுடும் என்கின்றார். யாரை? அன்பில்லாதவர்களை! எப்படி? என்பில்லாத புழுக்களை வெயில் சுட்டு வருத்துவது போல! இப்படிக் கூறுகின்ற வள்ளுவர், 'அறிவில்லாதவர்களை, அறக் கடவுள் சுடும் என்று சொல்லவில்லை அறிவில்லாதவன் தன்னைத் தானே கெடுத்துக் கொள்வான் என்பதுபோல வேண்டுமானால் பேசியிருக்கலாம். அப்படி, அன்பில்லாதவனை அறக்கடவுள் சுடும் என்று சொல்லுகின்ற பொழுது, சுடும் என்ற அச்சத்தினைக் காரணங் காட்டியாவது இந்த வையத்தை அன்பு வழியிலே அழைத்துச் செல்லவேண்டும் என்ற விருப்பம் திருவள்ளுவருக்கு இருந்தது என்று நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இனி குடும்ப வாழ்க்கைக்குப் பொருளாதாரம் எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். பொருளை ஈட்ட அறிவு துணை செய்கிறது என்ற செய்தியும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனாலும்கூடத் திருவள்ளுவர் குடும்ப வாழ்க்கைக்கு மூலப் பொருளாக-முதற் பொருளாக இன்றியமையாததாக அன்பையும் அறனையுமே வற்புறுத்துகின்றார்.

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"