பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் காட்டும் சமுதாயம்

189



அடுத்து இளையாங்குடிமாறநாயனார் விருந்து வந்த போது வறுமையின் காரணமாக அயர்ந்தார். "திரவே பசித்தார் செய்வதென்ன?” என்று இரங்குகின்றார். அப்போது அவர்தம் மனைவியார் அவர் அயர்ச்சி நீங்க நல்ல ஆலோசனை கூறும் பாங்கினை எண்ணிப் பார்ப்பின், அன்று மனைவியார் தத்தம் கண்வன்மாருக்கு ஆலோசனை கூறும் அறவுக்கு மதிநுட்பம் பெற்றிருந்தனர் என்பதும் அவர்தம் ஆலோசனையை அவரவர் கணவன்மார் பெருமை சிறுமை உணர்ச்சியின்றிக் கேட்டனர் என்பதும் பெறப்படுகின்றது.

"செல்லல் நீங்கப் பகல்வித்" தியசெந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக் கொடுவந்தால்
வல்ல வாறமு தாக்கலும் ஆகும்மற்(று)
அல்ல தொன்றறி யேன்"என் றவர்வுற.

மற்(று).அம் மாற்றம் மனைவியார் கூறலும்
பெற்ற செல்வம் எனப்பெரி துள்மகிழ்ந்(து)
உற்ற காதலி னால்ஒருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத் தொடங்குவார்.


என்ற திருப்பாடல்கள் படித்தின்புறத் தக்கன, தத்தம் கணவன்மார் எடுத்துக்கொண்ட குறிக்கோளை அடைவதில் சேக்கிழார் காட்டும் மனைவியர் உற்ற துணையாயிருந்திருக்கின்றனர். சிறுத்தொண்டர் மனைவி திருவெண்காட்டு நங்கையும், இயற்பகையார் மனைவியும் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆவர். வாழ்க்கையின் உயர் குறிக்கோளை அடைவதற்குத் தானே மனையறம்! அதற்கு ஒத்திசைந்த வளாக வாழ்கிறவள்தான் மனைவி என்ற சிறப்பைப் பெறமுடியும். அதனாலன்றோ வள்ளுவமும் "வாழ்க்கைத் துணை நலம்” என்று வாழ்த்தியது. பெரியபுராண மகளிர் அத்தகைய சிறப்புடையவரே!