பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தோழமைச் சிறப்பு


வாழ்க்கையில் காதலை ஒப்பச் சிறப்புடைய பண்புநட்பு இல்லை, காதலைவிடக் கூட நட்பு சிறந்தது. எந்தவொரு உயிரும் தனித்து வளர்தல் அரிது. உயிர், முதல் நிலையில் சுதந்தரமாக மனம்விட்டுக் கலந்துபேசி உரிமையையும் உறவையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றது நட்பேயாம். நட்பில்லாத வாழ்க்கை நிலவில்லாத வானம் போன்றது. நட்பு ஓர் உயரிய வாழ்க்கை முறை. ஆங்கிலச் சிந்தனையாளர்கள், "காதலிக்காமல் கூட இருக்க முடியும்; நட்பில்லாதிருக்க முடியாது” என்று கூறுகின்றார்கள். அகம் நிறைந்த நண்பினராகி வாழ்வளிக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பதரிது. பழகுவோரெல்லாம் நண்பர்களாகி விடமாட்டார்கள்.

சமுதாய அமைப்பு தொய்வுள்ளது. அதுவும் அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கே பற்றாக் குறை மிகுந்துள்ள நாட்டில் அழுக்காறு உறவினைக் கெடுக்கும்; உணர்வினை அழிக்கும்; நெறி முறையிகந்த போட்டிகள் தோன்றும்; தேவைக்காகக் கூடிக்குலவுவர்; தேவை நிறைவாகாதபோது பிரிவர்; பிரிந்து நின்றும் பேயைப்போலத் துன்பம் செய்வர். இந்த மனிதர் சந்தையில் நண்பர் கிடைப்பது அரிதே. அது மட்டுமன்று, வளர்ந்த நட்பாகவும் கிடைக்காது. கிடைத்த நட்பை வளர்த்து, அனுபவிக்க வேண்டும். அதற்குரிய பொறுத்தாற்றும் பண்பும்-பரிவும் தேவை. நட்பில் பிரிவு தீது, நோயுற்ற உடலைத் துறப்பார் யார்? அது போலத்தான் நட்பிலும்கூட! நண்பனின் குற்றம் அன்புற்றமர்ந்த நண்பனுக்குத் தெரியாது. ஒரோவழி தெரிந்திருந்தாலும் குற்றம் நீக்க மருத்துவனாய்-தாதியாய் நின்று தொழிற்படுவானே யன்றித் தூற்றமாட்டான். குற்றம் கூறிப் பழிவாங்க மாட்டான். அதனாலன்றோ, சுந்தரர் திருவாரூர் திருப்பதிகத்தில்,