பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சாதி வேற்றுமையை அடுத்து மனிதகுலத்தின் நல் வாழ்வுக்கெதிராக நிற்கும் பகை, வளம்-வறுமை என்ற வேறு பாடுகள், ஒரு சாதாரண மாளிகையைக் கூடச் சமதளத்தில் தான் கட்டமுடிகிறது. மேடு பள்ளமற்ற சாலைதான் பயணத்திற்கு இன்பம் தருகிறது. அது போலச் சமநிலைச் சமுதாயத்தில்தான் அன்பு தழிஇய உறவு வளர முடியும்; இன்ப ஒழுக்கத்தைக் காண இயலும். ஆதலால் அப்பரடிகள் வளம்-வறுமை என்ற வேறுபாட்டை ஈதற்பேரறத்தின் மூலம் நீக்கிச் சமநிலைச் சமுதாயங் காணத் துடித்தார். இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்குத்தான் செல்வம் வழங்கப் பெற்றது. இறைவன் திருவருள், தேவைப் படுகிறவர்களுக்குக் கொடுப்ப வர்களுக்குத்தாம் உண்டு. வழங்கி வாழ்வித்து வாழாத வன்கணாளர்களுக்கு நரகம்தான் கிடைக்கும். அரக்கருக்கும் மன்னித்தருள்பாலிக்கும் அண்ணல், ஈயாது இவறிக் கூட்டுப வர்களுக்கு நரகமே நல்கும் என்று அப்பரடிகள் கூறுகிறார். இந்தக் கொள்கையைத்தான் அண்மைக்காலத்தில் "தர்ம கர்த்தாக்கொள்கை" என்று அரசியல் பொருளியல் வல்லு நர்கள் குறிப்பிட்டார்கள். அண்ணல் காந்தியடிகளின் கொள்கை, தர்மகர்த்தாக் கொள்கையேயாகும். இந்த இனிய அரிய கொள்கையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள்.

 "இரப்பவர்க் கீயவைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
  கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார் பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன்ஐ யாறனாரே."

-4, 38–10


என்று பாடினார்.