பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பெரியபுராணத்தில் பொருளாதாரத் தகுதிப்பாடு

செல்வம், எல்லாருக்கும் கிடைக்கவேண்டும். ஒரு சிலரே எடுத்துக்கொள்ளலாகாது. இதனைச் சேக்கிழார் நயம்பட எடுத்துரைக்கின்றார். குண்டையூர்க்கிழவர் வேண்டுகோளின்படி இறையளித்த நெல்மலையைப் பரவையார் விருப்பத்தை நிறைவேற்றச் சுந்தரர் வேண்டுகோளுக்கிணங்கிப் பூதத்தின் வாயிலாக ஆரூரில் நெல்மலை குவித்தான் கோளிலியப்பன். ஆரூர்த்தெருவில் மலையெனக் குவிந்த நெல்லை ஆரூரிலுள்ளார் அனைவரும் அவரவர் மனைக்கு முன்னுள்ளதை அவரவரே எடுத்துக் கொள்ளும்படி பரவைநாச்சியார் பறையறைந்து கேட்டுக் கொண்டது, பொருளியற் புரட்சிதான்! இன்றும் இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள குறை, விநியோக முறையில் உள்ள தவறுதானே!சேக்கிழார் காட்டும் பரவை நாச்சியாரின் பெரும் பண்பு நமது நாட்டில் அனைவருக்கும் வந்து விட்டால் களவு குறையாதா? காவல் நீங்காதா? பகைமை மாறாதா? பண்பு வளராதா? அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள்!

பெரியபுராணத்தில் அரசியல்

பெரியபுராணம் அரசியல் நூலாகவும் விளங்குகிறது. அஃது அரசனின் நெறிமுறை பற்றியும் பேசுகிறது. சேக்கிழார் அநபாய சோழனின் பேரரசைப் பாராட்டிப் பாடியுள்ளார். அநபாய சோழனின் அரசு, பேரரசு என்பதை “வையம் பொதுக் கடிந்து” என்று கூறிப் புகழ்கிறார். வையம், அநபாய சோழனின் அரவணைப்பில் இனிதே உளது என்று பாடுகிறார். அநபாய சோழனின் கொற்றக்குடை, குடிமக்களுக்குக் குளிர் நிழல் தரும் குடையென்று வாழ்த்துவதன் மூலம், அரசு பேரரசாக, இனியதாகத் தண்ணளியுடையதாக அமைய வேண்டும் என்பதை உணர்த்துகின்றார்.