62
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
கழகத்தின் பெருமையும்-வாழ்த்தும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம் ஒரு பதிப்புக்கழகம் மட்டுமன்று, பைந்தமிழ்ப் பாசறையாகும்; வணிகநோக்குடையது மட்டுமன்று, வண்மைத் தமிழ்வளர்க்கும் நோக்குடையதுமாகும். தமிழ்ப் பாசறை மட்டுமன்று தமிழினத்திற்கோர் அரணுமாகும். அரண்மட்டுமன்று. அருள் நெறிவளர்க்கும் திருவோலக்கமாகும். இக்கழகம், தமிழும் சிவமும்போல் தழைத்து வளர்ந்திருக்கிறது; பொன்னார் மேனியன் புண்ணியத்தால் பொன்விழாக் கண்டிருக்கிறது. கழகத்தின் இயற்கைக் காவலராகிய தாமரைச் செல்வர் வ. சுப்பையா பிள்ளை செந்தமிழன்பர்; சித்தாந்தச் சமய நெறியில் ஊற்றங் கொண்டவர். பல்லாற்றானும் தொழில் திறன் மிக்கவர். இக்கழகம், பொன்விழாவைச் சேக்கிழார் விழாவாகக் கொண்டாடுகிறது. தொண்டில் வளர்ந்த கழகம், தொண்டர் சீர் பரவுவதில் வியப்பில்லை. சேக்கிழார் வாழ்த்தியது போல் கழகம் இக்காசினியில் நின்று நிலவிடுக!
"என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்!”
"சேக்கிழார் பெம்மான் திருவருளால் தோன்றிலரேல்
ஆக்கமிகு நன்னெறியும் அஞ்செழுத்தும்-நோக்குடைய
செந்தமிழ்வெண் ணீறும் திருமுறையும் சீரமைவும்
மைந்தரிலா வாழ்வாகும் மற்று.