பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சேக்கிழார், அப்பரடிகள் காலத்திற்கு மிகமிகப் பிந்தியவர் ஆயினும், அப்பரடிகளை நினைந்து நினைந்து, தமது உள்ளக்கிழியில் உரு எழுதி ஒவாத் தமிழ் தந்துள்ள அருமை, நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. அப்பரடிகளின் திருமேனி, திருவுள்ளம் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அப்பரடிகள், திருநீறணிந்து மகிழ்வதைக் கடமையாகக் கொண்டவர். பழுதிலாத் துறவாலும், சிலம்நிறை வாழ்வாலும், தவத்தின் வலிமையாலும், திருவருள் நினைவாலும், பொன்னொளிர் மேனி பெற்றவர். அந்தப் பொன் மேனியில் திருநீறு மண்டி மணம் கமழ்கின்றது.

இறைவனின் திருவடிகளை அப்பரடிகள்தம் நெஞ்சு அண்ணித்துத் தொட்டுத் தடவிக் கொண்டிருக்கிறது: அப்பரடிகள் நெஞ்சத்தில் திருவடிகள் திருக்கோயில் கொண்டருளின. அப்பரடிகளின் நெஞ்சம், ஒன்றையே நினைக்கிறது. மறந்தும் பிறிதொன்றை நினைப்பதில்லை. அதுவே, எந்தை ஈசன் திருவடிகள்! நெஞ்சத்தில் திருவடியை நினைந்து நினைந்து இன்ப அன்பினில் திளைத்து மகிழ்வ தால் கண்களில் நீர் மல்குகின்றது. அன்பின் பெருக்கில் ஊற்றெடுப்பது கண்ணிரே! கண்கள் காதற் பெருக்கில் கண்ணிரை மழையெனப் பொழிகின்றன!

அப்பரடிகளின் செந்நா சிவத்தையே பாடிய செந்நா. அவர் வாயில் உதித்த சொற்கள் செஞ்சொற்கள். சிவத்தின் செவிக்கே அமுதமெனத்திகழ்ந்த சொற்கள். நன்றுடையானே நாவுக்கரசரெனப் பெயர் சூட்டியபேரரசு, அப்பரடிகள் திருவாயில் ஊற்றெடுத்த திருத்தமிழைச் செவிமடுப்பதற் கென்றே எம்பெருமானும் கயிலையை மாற்றிக்கொண்டார்!

இத்தகைய இனிய இயல்புகளையுடைய அப்பரடிகள் புலன்கள்மீது தனியரசு செலுத்திய அரசு எனவும், நற்றமிழ்க்கோர் நாவுக்கரசெனவும், சிவநெறிக்கோர் அருளரசு