நா.பார்த்தசாரதி - 5]
'இடத்தைக் காட்டறதாவது நான் உங்ககூடத் துணைக்கு வரேன். அம்மா சரவணப் பொய்கை கரையிலே அந்த நாவல் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பாரு செட்டியாரு. பார்த்து ஒரு வார்த்தை காதிலே போட்டுட்டா வேறே யாருக்கும் விடமாட்டாரு. நமக்கு உறுதி சொன்னது போலத் திருப்தி யாயிடும்' என்று உற்சாகமாகக் கூறித் தானும் உடன் புறப் பட்டான் கிழவன். முன்னால் கிழவனும், அடுத்தாற் போல் கமலாவும், கடைசியாக பூரணியும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். தண்ணிர் பாயும் ஒலி, வயல்களில் தவளைக் கூச்சல், மலையில் காற்று மோதிச் சுழிக்கும் 'சுர்ர் ஒசைஇவை தவிர, இரவின் அமைதி சூழ்ந்திருந்த அத்துவனமாக இருந்தது அந்த இடம். தூரத்திலிருந்து டுரிங் சினிமா ஒலி நைந்து வந்தது.
மர நிழல்களின் ஊடே சிவந்த மேனியில் தேமல் போல் நிலவொளியும் நிழலும் கலந்து பூமியில் படரும் அழகைப் பார்த்துக் கொண்டே பூரணி தரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.
திடீரென்று, "ஐயோ! சங்கிலியை அறுத்துக் கொண்டு ஒடுகிறானே' என்ற கமலாவின் அலறலும் திடுதிடுவென்று ஒடும் ஒலியும் அவளைத் தூக்கி வாரிப்போடச் செய்தன. எதிரே பார்த்தாள். கமலாவும் அந்த ஆளும் தனக்கு மிகவும் முன்னால் போயிருந்தது தெரிந்தது. கமலா பதறி நின்றாள். அந்தப் பூனைக்கண் கிழவன் தான் முன்புறம் ஒடிக்கொண்டிருந்தான். பூரணியின் உடம்பில் எங்கிருந்து தான் அந்தப் பலம் வந்து புகுந்ததுவோ, அவனைத் துரத்தி ஒடலானாள். கீழே கிடந்த ஒரு குச்சுக் கல்லை எடுத்து ஒடுகிறவன் பிடறியைக் குறிவைத்து வீசினாள். அடுத்த கணம் அவன் குரூரமாக அலறி விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். பூரணி விடவில்லை. அருகில் நெருங்கி அவனைப் பிடித்துவிட்டாள். நாயைச் சங்கிலியால் பிணிக்கிற மாதிரி அவனுடைய அழுக்குத் துண்டாலேயே அவன் கைகளைக் கட்டினாள்.