170
இன்று பிற்பகல் அரக்கோணம் ராமசாமி, "இரத்தக்கொடை" அளித்தார். கட்டுடல் பெற்ற அவருக்கு, அதனால் எந்தவிதமான களைப்பும் ஏற்படவில்லை. வெளியில் இருக்கும்போதே "குருதிக் கொடை" தர விரும்பினாராம்—இங்கே அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
மேலவைகளுக்கான தேர்தல்களில் பங்குகொள்ளப் 'பரோல்' பெறக்கூடும் என்று எண்ணிக்கொண்டிருந்த மதியழகன்—ராமசாமி—இருவருக்கும், இன்றைய பத்திரிகையில் முதலமைச்சர், "பரோல்" தருவது இயலாது என்று வெளியிட்டிருந்த அறிவிப்பு, கிடைத்தது.
முதலமைச்சர், 'பரோல்' தர மறுத்துவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை—எனவே அவருடைய அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது—பொதுமக்களும் இது கண்டு எரிச்சல் அடைந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்
கள்ளநோட்டு வெளியிட்டவர்களுக்குக்கூட, கேட்கும் போது 'பரோல்' கிடைக்கிறது? நமது கழகத் தோழர்கள் விஷயத்திலேதான், அமைச்சர்கள் தமக்கு உள்ள கண்டிப்பு அவ்வளவையும் காட்டி வருகிறார்கள்.
இன்று காலை வழக்கம்போல் சிறை மேலதிகாரிகள் கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறளாராய்ச்சிக்கு இடையில், நண்பர் அன்பழகன், நான் படித்து வியந்த 'மாமன்னரின் மருத்துவன்' என்ற ஆங்கிலநூலை (கிருத்துவமார்க்கத் துவக்ககாலக் காதை)ப் படித்து வருகிறார்.
25—3—64
இடது கரத்திலே வலி குறையக் காணோம். சுடுநீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன்—அப்போதைக்கு இதமாக இருக்கிறது. வெளியே சென்றதும், தக்க மருந்து உட்கொண்டு வலியை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று நண்பர்கள் அன்புடன் கூறி, பல்வேறு மருத்துவ முறைகள் குறித்துக் கூறினார்கள்.