பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அரசர் கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேரநாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் இருந்தபடியால் அவர்கள் இந்தத் துறைமுகங்களையும் பூழிநாட்டையும் கொங்குச் சேரர்களுக்குக் கொடுத்தார்கள் என்று தெரிகின்றது. பிறகு பூழிநாடும் அதன் துறைமுகப் பட்டினங்களும் கொங்குச் சேரர்களிடம் இருந்தன.

கொங்கு நாட்டரசர்கள் பூழியர்கோ என்றும் பூழியர் மெய்ம்மறை என்றும் கூறப்பட்டனர். செல்வக் கடுங்கோ வாழியாதன்,

“ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணமாப் பியானைச் செருமிகு நோன்றாள்
செல்வக் கடுங்கோ வாழியாதன்”

(புறம். 387: 28-30)

என்று கூறப்படுகின்றான். அவனுடைய மகனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை “பூழியர் மெய்ம்மறை” (8-ஆம் பத்து 3:13) என்று கூறப்படுகிறான். அவனுக்குப் பிறகு கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரல் இரும் பொறை “பூழியர் கோவே” என்றும் (9-ம்பத்து 4:6) “பூழியர் மெய்ப் மறை” என்றும் (9-ஆம் பத்து 10:27) கூறப்படுகின்றான். இதனால், கொங்குச் சேரர் பூழிநாட்டையும் அதனைச் சேர்ந்த மாந்தை, தொண்டி என்னுந் துறைமுகப் பட்டினங்களையும் வைத்திருந்தனர் என்பது தெரிகின்றது.

பூழிநாடு மேற்குக் கடற்கரையோரத்தில் துளுநாட்டுக்குத் தெற்கிலும் சேரநாட்டுக்கு வடக்கிலும் அமைந்திருந்ததை யறிந்தோம். இந்த நாட்டின் இயற்கை வளத்தையும் இங்கிருந்த தொண்டித் துறை முகத்தையும் குறுங்கோழியூர் கிழார் கூறுகின்றார்.

“குலையிறைஞ்சிய கோள் தாழை,
அகல்வயல் மலைவேலி
நிவந்த மணல் வியன்கானல்