பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கோடுகளும் கோலங்களும்


கலந்த யூரியா கொஞ்சம் கொஞ்சமாக அதன் வேர்களுக்குப் போகுமாம்.

பத்தி நடவு, இடையில் உள்ள வெளி, கால் வைத்துப் பயிர்களைப் பார்க்க, இடையே களை, பூண்டு இருக்கிறதா என்று பார்க்க, கழிக்க வசதியாக இருக்கிறது. ஆனால், களையே மண்டவில்லையே? மேலுரம் இடுமுன் களையெடுக்க என்று நாலைந்து ஆட்கூலி கொடுக்க வேண்டுமே? ஆச்சரியமாக இருக்கிறது. களையே வரவில்லை. அவ்வப்போது வந்து புல், பூண்டு சும்மாகையில் புடுங்கி விடுகிறாள். கதிர் பூக்கும் பருவம்.

சித்திரைப் பட்டம்-சொர்ணவாளிப்பினால், இப்போது அறுவடையாகும். அதற்கு முப்பத்தைந்துக்கு மேல் உரமிட வேண்டாமாம். இது ஆடிப்பட்டம். சம்பா.... இன்னொரு உரம். யூரியாவும் பொட்டாஷும் மட்டும் போட்டால் போதும்.

தினமும் இந்தப் பயிரைச்சுற்றி வரும்போது மனது எல்லாக் கவலைகளையும் மறந்து விடுகிறது. வான வெளியில் சிறகடித்துப் பறக்கும் ஒர் உற்சாகம் மேலிடுகிறது. கால்காணியோடு ஏன் நிறுத்தினோம், முழுவதும் இப்படிப் பயிரிட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. நாற்றங்களில் எஞ்சிய நாற்றுக்களை, வேல்சாமி பயன்படுத்திக் கொண்டான்.

“செவந்தியே! செவுந்தி!”

ரங்கனின் குரல்தான். முள்ளுக்காத்தான் செடிப் பக்கம் வெள்ளையாகத் தெரிகிறது.

வா! என்று கையைசைக்கிறான்.

கருக்கென்று ஒரு திடுக்கிடும் உணர்வுடன் வரப்பில் விரைந்து நடக்கிறாள். சிறு களைக்கொட்டும் கூடையுமாக விரைகிறாள்.

அப்பனுக்கு ஏதேனுமா? மாடு நிறைசெனை... அதற்கு ஏதேனுமா? நெஞ்சு குலுங்க வருகிறாள்.