பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

51


“என்னாங்க? அப்பா..... ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, வாசொல்றே....”

வெற்றிலைக் கொடிக்காலின் வாசனை வருகிறது. “சென மாடு..... காலமயே தீனி எடுக்கல. அதுக்கு நேரம் வந்திடிச்சா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல..... வூட்ல ஆள் வந்திருக்காங்க. பட்டணத்துப் பெரீம்மா...”

“பட்டணத்துப் பெரீம்மாவா? பெரீம்மாவா?”

சின்னம்மா என்றால் நடவாதது நடந்து விட்டதாகத் தோன்றும். “பெரிம்மா. ஆரு... எந்தப் பெரீம்மா?”

“என்ன நீ, தெரியாதது போலக் கேக்குற? சுந்தரிக்கும் கூட ஒரு பக்கம் உறமுறை. அவ பெரியப்பன் மக உசாவைக் கட்டிருக்கே அந்தப் பெரிம்மா...”

“ஒ....அவுங்களா?”

“அவுங்க எதுக்காக நம்மூட்டத் தேடி வாராங்க? அவுங்களுக்கும் நமக்கும் எந்த நாளிலும் நெனப்பில்லியே? இப்ப என்ன வந்திச்சி, உறவு, நீங்க அக்கறயாகூப்பிடவரீங்க? அதுக்குத்தா, அம்மா இருக்காங்க, சுந்தரி இருப்பா?”

“நீ என்ன கிராஸ் கேள்வி கேக்குற? செவுந்தி இல்லியான்னு கேட்டாங்க. வூடு தேடி வந்தாங்க. வந்திருக்காங்க. சேவுப் பொட்டலம் ஒண்ணு வாங்கியாந்தே.... நீ வந்து ரெண்டு வார்த்த பேசு...”

அவளுக்குப் பிடிக்கவில்லை.

பின் தாழ்வரையில் களைகொட்டையும் கூடையையும் வைக்கிறாள். தலைப்பை உதறிச் சுற்றிக்கொண்டு வருகிறாள். பசு மாடு குரல் கொடுக்கிறது.

அதற்கு நேரம் வந்து விட்டது. ஒரு காலை மாற்றி ஒரு காலை வைத்து அவதிப்படுகிறது.

“என்னாங்க பசு அவதிப்படுது. பாத்தீங்கல்ல!”