பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

53


“வாம்மா. செவுந்தி! உன் தாத்தா திருவிழாவுக்கு உன்னத் தூக்கிட்டு வாரப்ப பாத்தது. மூக்கொழுகிட்டிருக்கும். மேத்துணில துடச்சி பாசமா வச்சிப்பாரு. இப்ப உனுக்கு மேசரான பொண்ணிருக்காமே.....?” என்று விசாரிக்கிறாள்.

“ஏது இவ்ளோதுாரம் வந்திட்டீங்க? உங்களுக்கெல்லாம் நாங்க இருக்கிறது ஞாபகமே இருக்காதே?”

செவந்தி குத்தலாகப் பேசிவிட்டு உள்ளே சென்று தண்ணி எடுத்துக் குடிக்கிறாள். பிற்பகல் மூன்று மணி நேரம். இன்று பொழுதுடன் சாப்பாட்டுக் கடையாகி விட்டது.

“டீ போட்டுட்டு வா செவுந்தி....” என்று காரா சேவை சில்வர் தட்டில் பிரித்துப் போட்டுக் கொண்டு வருகிறான்.

“மாமா உடம்பு ரொம்ப மோசமாயிருக்காரே! ஒரு நட எல்லாம் வாங்க.”

“முத்தப்பனுக்கு அப்பலோ ஆசுபத்திரி டாக்டர்லாம் நல்லாத் தெரியும். வெளிநாட்டிலேந்தெல்லாம் ஹார்ட் ஆபுரேசன் பண்ணிட்டுப் போறாங்க. எம்.ஜி.ஆர். அங்கதான படுத்திருந்தாரு? அவருக்குன்னு ஸ்பெசலா ஒரு மெத்த பண்ணிருந்தாங்க. அது மட்டும் நாலு கோடியாம்....” செவந்திக்கு அவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளவேண்டும் போல இருக்கிறது.

அப்பனுக்கு ஒரே தாரக மந்திரம் தான்...

“ஆமா.....ராசாத்திய எப்பனாலும் பாப்பியா?”

“ஏம்பாக்காமா? அவ மருமவ சுந்தர் நம்ம கண்ணனுக்குத் தோஸ்து. இவந்தா அவனுக்கு வேல போட்டுக் குடுத்திருக்கிறா. ரெண்டு பொட்டப்புள்ள... ஏரிப்பக்கம் குட்சையில தா இருக்கு... அவ ஆத்தாக்காரி ஹோம்ல வேல செய்யிறா. எப்பனாலும் பாப்பே.....”

“நீ பார்த்தா, ஒருக்க வந்து போகச் சொல்லு. நாகு போனதெல்லா போவட்டும். மறந்திடு. மன்னாடிக் கேட்டுக்கிட்டேன்னு சொல்லு...”

அப்பனுக்கு நெஞ்சுதழுதழுத்துக் குரல் நெகிழ்கிறது.