பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

சங்க இலக்கியத் தாவரங்கள்

 

தோற்றுவாய்

 

உலகில் இப்போது வாழ்ந்து வரும் தாவரங்கள் ஏறத்தாழ 3,63,730 தாவரப் பேரினங்களில் அடங்கும். இவை பரிணாம முறையில் நுண்மங்கள், பாசிகள், காளான்கள், ஈரற்செடிகள், பெரணைகள், விதை மூடாத தாவரங்கள், பூக்கும் தாவரங்கள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூக்கும் தாவரங்களில் மட்டும் 96,680 பேரினங்கள் உலகெங்கணும் வளர்கின்றன. ஒரு பேரினத்தில் பல சிற்றினங்கள் உண்டு. பண்டைய இந்திய நாட்டில் மட்டும் வளரும் சற்று ஏறக்குறைய 47,200 சிற்றினங்களைப் பற்றிய விளக்கங்களை ஜே. டி. ஹூக்கர் (1897) என்பவர் எழுதியுள்ளார். பண்டைய சென்னை மாநிலத்தில் உள்ள ஏறக் குறைய 9300 சிற்றினங்களைப் பற்றிய விளக்கங்களை ஜே. எஸ். காம்பிள் (1915) என்பவர் எழுதியுள்ளார். இம்மாநிலத்தில் வளரும் ஏறக்குறைய 10,640 மரம், செடி, கொடிகளின் தாவரச் சிற்றினப் பெயர்களையும், தமிழ்ப் பெயர்களையும் எ. டபிள்யூ. லஷிங்டன் (1915) என்பவர் பட்டியலிட்டுள்ளார். (இவற்றுள் பல மிகைப்படுத்தப்பட்டுள்ளன). சங்க இலக்கியங்களில் மட்டும் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.