பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

ஆம்பல்
நிம்பேயா பூபெசென்ஸ்
(Nymphaea pubescens, willd.)

ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம்” என்பது கபிலர் வாக்கு (குறிஞ். 62). இவ்வடியில் பயிலப்படும் ‘ஆம்பல்’ என்பதற்கு ‘ஆம்பற்பூ’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். ‘ஆம்பல்’ என்பது ‘அல்லி’, ‘குமுதம்’ என வழங்கும். ஆம்பல் வகையில் தமிழ் நாட்டில் வெண்ணிற மலரையுடைய வெள்ளாம்பலும், நீல நிற மலரையுடைய நீல ஆம்பலும், செந்நிற மலரையுடைய அரக்காம்பலும் (செவ்வல்லி) உள்ளன. பொதுவாக ஆம்பல் என்புழி, சங்க இலக்கியங்கள் வெள்ளாம்பலைக் குறிக்கின்றன. இதனை முதன் முதலில் நிம்பேயா ஆல்பா என்று பெயரிட்டார் லின்னேயஸ். இப்போது இதற்கு நிம்பேயா பூபெசென்ஸ் என்று பெயர். நீல ஆம்பலும் அரக்காம்பலும் (செவ்வல்லி) வெள்ளாம்பலைப் பெரிதும் ஒத்தவை. ஈண்டு வெள்ளாம்பலைப் பற்றிப் புலவர்கள் கூறியனவற்றைச் சிறிது காண்போம்.

சங்க இலக்கியப் பெயர் : ஆம்பல்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : அல்லி
உலக வழக்குப் பெயர் : அல்லி, குமுதம்
தாவரப் பெயர் : நிம்பேயா பூபெசென்ஸ்
(Nymphaea pubescens,Willd.)

ஆம்பல் இலக்கியம்

ஆம்பல் என்பது அல்லி, குமுதம் என வழங்கப்படுகின்ற நீரில் வாழும் தாவரமாகும். நெய்தல் எனப்படும் கருங்குவளையும், கழுநீர் எனப்படும் செங்குவளையும் ஆம்பல் இனத்தைச் சார்ந்தவை. ஆம்பல் இனத்தில் செவ்விய அரக்காம்பலும், மஞ்சள் நிறமுள்ள ஆம்பல் மலரும் உண்டு. எனினும், ஆம்பல் என்பதை வெள்ளாம்பல் என்றே இலக்கியங்கள் கூறுகின்றன.