பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

அடும்பு
ஐபோமியா பெஸ்காப்ரே (Ipomoea pescaprae.,Sweet.)

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அடும்பு’ என்பது கடற்கரை மணலில் வளரும் அடப்பங் கொடியாகும் இதன் செந்நீல மலர் மிக அழகானது.

சங்க இலக்கியப் பெயர் : அடும்பு
தாவரப் பெயர் : ஐபோமியா பெஸ்காப்ரே
(Ipomoea pescaprae.,Sweet.)
ஆங்கிலப் பெயர் : ஆட்டுக் குளம்புக்கொடி
(Goats foot creeper)

அடும்பு இலக்கியம்

இதனைக் ‘குதிரைக் குளம்புக் கொடி’ என்று சற்றுத் தவறுதலாகக் கூறுவர். எனினும், இதன் இலை மானின் குளம்பு போன்று இரு பிளவாக இருத்தலின் குறுந்தொகைப் புலவர் இதன் இலையை ‘மானடியன்ன கவட்டிலை’ என்றார்.

“அடும்பு அமர்ஆத்தி நெடுங்கொடி அவரை-குறிஞ். 87

என்று கபிலர் கூறும் ‘அடும்பு’ ஒரு கொடியாகும். இதற்கு நச்சினார்க்கினியர் ‘அடும்பம்பூ’ எனவும்,

“வறள் அடும்பின் மலர் மலைந்தும்

-பட்.பா. 64.

என்புழி. ‘மணலிலே படர்ந்த அடப்பம்பூ’ எனவும்

“அடும்பிவர் அணி எக்கர்-கலி, 132 : 16

என்புழி ‘அடும்பங்கொடி படர்ந்த இடுமணலிலே’ எனவும் உரை கூறுவாராயினர்.