பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சீதாவும் ஆறும்
ஸ்கின் பாண்ட்


மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப் பெரிய ஆற்றின் நடுவில் ஒரு சிறு தீவு இருந்தது. ஆறு தீவைச் சுற்றி ஒடியது; சிலசமயம் அதன் கரைகளை அரித்தது; ஆனால் ஒருபோதும் தீவின் மேலாக ஒடியதில்லை. அத் தீவில் ஒரு சிறு குடிசை இருந்தது. மண்சுவரும் சாய்வான ஒலைக் கூரையும் கொண்ட குடிசை பெரிய பாறை ஒன்றை ஒட்டி அது கட்டப்பட்டிருந்தது. எனவே மூன்று சுவர்கள் தான் மண்ணாலானவை. பாறையே நாலாவது சுவர்.

சில வெள்ளாடுகள் தீவில் முளைத்த புல்லை மேய்ந்தன. பெட்டைக் கோழிகள் சில அவற்றைச் சுற்றித் திரிந்தன. முலாம் செடிப் பாத்தியும், காய்கறிப் பாத்தியும் அங்கிருந்தன.

தீவின் மத்தியில் ஒரு அரச மரம் நின்றது.

அது மிகப் பழைய மரம். பல வருடங்களுக்கு முன்பு, வலிய காற்று ஒன்று ஒரு விதையைத் தீவில் கொண்டு சேர்த்தது. இரண்டு பாறைகளுக்கிடையே சிக்கிய அது அங்கேயே வேர்விட்டு வளர்ந்தது. பெரிய மரமாகி ஒரு சிறு குடும்பத்துக்குப் பாதுகாப்பும் நிழலும் அளித்தது.

தாத்தா மீன் வலையைப் பழுது பார்த்தார். ஆற்றில் பத்து வருட காலம் அவர் மீன் பிடித்திருக்கிறார். அவர் நல்ல மீனவர். மெலிந்த வெள்ளிய சில்வா மீன், அழகான பெரிய மாவுநீர், நீண்ட மீசைக்கார சிங்காரா மீன் வகைகள் அங்கே அகப்படும் என அவர் அறிவார். ஆறு எங்கே அதிக ஆழம், எங்கே ஆழமில்லை என்பது அவருக்குத் தெரியும். எந்தத் தூண்டில் இரை உபயோகிப்பது-எந்த மீன் புழுக்களை விரும்பும், எது பயறுகளை நாடும் என அறிவார். அவர் தன் மகனுக்கு மீன் பிடிக்கக் கற்றுத்தந்தார். ஆனால் அவர் மகன் நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு நகரில் தொழிற்சாலையில் பணிபுரியப் போய்விட்டான். அவருக்கு பேரன் இல்லை. சீதா என்று ஒரு பேத்தி இருந்தாள். ஒரு பையன் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவள் செய்தாள். சில சமயம் சிறப்பாகவே செய்தாள். அவள் மிகச் சின்னவளாக இருந்த போதே அவள் அம்மா