பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராகுலன்
திரிவேணி



ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள். நாய் வருகிறது எனத் தெரிந்ததுமே அவள் குழம்பித் தவித்தாள். பத்திரிகை படித்துக் கொண்டிருந்த என் அப்பாவிடம் போய், "கவனி, குழந்தே" என்றாள். ராகுலனைப் பற்றி பாட்டி நீண்ட உபதேசம் புரிவாள் என அப்பா அறிவார். எனவே அவர் பத்திரிகையை மடக்கி விட்டு அவள் சொற்பொழிவைக் கேட்கத் தயாரானார். நான் ஒரு கொய்யாப்பழத்தைக் கடித்தபடி அவர்கள் அருகில் நின்றேன்.

"இந்த வீட்டில் என்ன நடக்கிறது" என்று அவள் கேட்டாள். "பிராமணர்கள் எப்படித் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கலாம்? அது அசிங்கமான பிராணி. நாம் நமது சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அனுஷ்டிப்பதற்கு ரொம்ப சுத்தமாக இருக்கவேண்டும்."

"நாய் வெகு புத்திசாலியான பிராணி. நாம் அதுக்குக் கற்றுக் கொடுத்தால் அது விரைவில் கற்றுக் கொள்ளும், எல்லாம் நாம் அதை எப்படிப் பழக்குகிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது."

"மண்ணாங்கட்டி மோசமான ஒரு நாய்க்குட்டியை நீ எப்படிப் பழக்குவாய்? எந்த நேரத்தில் அது எப்படி நடந்துகொள்ளும் என்பதை நீ எவ்வாறு அறியமுடியும் அரிசி அல்லது காய்கறி வேகும் வாசனையை உணர்ந்து அது அடுப்பங்கரைக்குள் ஒடினால் என்ன செய்வது? அடுக்களையைப் புனிதப்படுத்த நாம் எவ்வளவு செலவும் சிரமமும் மேற்கொள்ள நேரிடும்?"

"அம்மா, நாம் ஜாக்கிரதையாக இருந்து, அது அடுப்பங்கரைக்குள் போகாதபடி பார்த்துக் கொள்ளலாம். ஒரிரு தடவை அதுக்கு நல்ல அடி கொடு. எங்கே போகலாம், எங்கே போகக்கூடாது என்பதை அது தெரிந்து கொள்ளும்."