பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 299

கோவலன் பிரிய அதனால் வருந்தி இளைத்து வாடிய மாதவிபோல் வாட்டமுற்றிருக்கிறாயோ' என்று பேச்சுக் கொடுத்துத் தனி மொழி பேசினான். இலை வேயப்பட்ட பந்தலிடை நின்று அவன் பேசினான். இந்தக் கோசிகமாணி இவ்வாறு கூறக் கேட்ட கோவலன், 'நீ கூறியது யாது?' எனக் கேட்க அவன்தான் இவன் என்று தெரிந்தவனாய் அவனிடம் பேசி அவன் பெற்றோர்களின் அவலத்தையும், மாதவியின் மயக்கத்தையும் விரித்து உரைத்தான்.

'நின் தந்தையும் தாயும் மணிஇழந்த நாகம் போன்று துடித்து வருந்தினர். சுற்றத்தவர் உயிர் இழந்த யாக்கை எனத் துயரத்தில் ஆழ்ந்தனர். ஏவலாளர் பல இடத்தும் சென்று தேடித் திரும்பினர். தசரதன் ஆணையால் காடு அடைந்த இராமனைப் பிரிந்த அயோத்தி போல் நகர மக்கள் பெரிதும் வருந்தினர்' என்று கூறினான்.

மாதவியின் நிலையினையும் கோசிகன் உரைத்தான்; 'வசந்தமாலைவாய்க் கசந்த செய்தியாகிய உன் பிரிவைக் கேட்டுப் பசந்த மேனியள் ஆயினாள் மாதவி. அவள் தன் நெடுநிலை மாடத்து இடைநிலத்துக் கிடந்து இடர் உற்றாள். அந்தச் செய்தியை அறிந்து அவள் துயர் தீர்க்க யான் அவளிடம் சென்றேன்; அவள் என்னிடம் ஒரு முடங்கல் தந்து அனுப்பினாள்' என்று வரிசைப் படுத்திக் கூறினான்.

பல இடங்களில் தேடி அலைந்து தான் இப்பொழுது அவனைக் கண்டதையும் எடுத்து உரைத்தான். மாதவி தந்த ஒலையை அவன் அழகிய கையில் நீட்ட அவன் அதனை வாங்கினான். தான் அவளோடு உறைந்த காலத்தில் நுகர்ந்த மணத்தை அது அவனுக்கு நினைவு ஊட்டியது; பழையநினைவு அவனை வாட்டியது; அதனை விரும்பி வாங்கினான். திரும்பத் தந்திலன்; ஏட்டை விரித்து அவள் எழுதியதைப் பாட்டு எனப் படித்தான். 'அடிகளே! யான் உம் திருவடிகளில் விழுகின்றேன்; வணங்குகின்றேன். குழம்பிய நிலையில் எழுதும் இச்செய்திகளைப் படித்து மனத்தில் கொள்ள வேண்டுகிறேன். குரவர் பணி இழத்தல், குல மகளோடு இரவிடைக்கழிதல் இரண்டிற்கும் யான் காரணமாகிறேன்; செயலற்ற நிலையில் சிந்தை இழந்து வருந்துகின்றேன். என்னை மன்னிப்பீராக” என்று அவ் வாசகம் அமைந்திருந்தது. அவள் தீது இலள் தான்