பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 - அடைக்கலக் காதை

மாதரி வருகை

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் அங்கு இடைக் குலமடந்தையாகிய மாதரி என்பாள் வந்து சேர்ந்தாள்; அந்த மதிலின் பக்கத்து ஊரில் இயக்கியாகிய தெய்வத்துக்குப் பால்சோறு படைத்து விட்டுத் திரும்பினாள். அவள் கவுந்தி யடிகளை மதிப்பின் காரணமாக வணங்கி எழுந்தாள். 'இவள் பசுவைக்கொண்டு பால் விற்று வாழ்க்கை நடத்துபவள் எந்தக் கொடுமையும் அறியாதவள்; தீமை அறியாதவள்; சாதாரண இரக்கத் தன்மையள், செவ்வியள்; இவளே அடைக்கலம் தருதற்குத் தக்கவள்” என்று முடிவு செய்தார்.

'செல்வமகள் அவள்; இவள் கணவனின் தந்தையின் பெயர் கேட்ட அளவில் நகரத்து வணிகர் நயந்து வரவேற்பர். செல்வர் தம் மனையில் அவர் சேர்வர்; அதுவரை அவளை உன்பால் அடைக்கலம் தந்தேன்' என்று கூறி மாதரியிடம் கண்ணகியை ஒப்படைத்தார் கவுந்திஅடிகள்.

"இவளை நீராட்டிக் கண்ணுக்கு மை தீட்டிக் கூந்தலுக்குப் பூ சூட்டித் துாய ஆடை உடுப்பித்து இவளை நன்கு போற்றிக் காப்பாயாக ஆயமும் காவலும் நீயேயாகுக, அவளை ஏற்க' என்று கூறினார்.

'இங்கு என்னொடு வந்த இளநங்கை மென்மைமிக்கவள். அவள் காலடிகள் மண்ணை மிதித்தது இல்லை. அத்தகையவள் காதலனோடு கடுமையான வெய்யிலில் கொடுமையான காட்டு வழியில் கணவனுடன் நடந்தாள். நாப் புலர வாடி வருந்தினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு கொண்டாள். தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள். இன்னும் இவளைப்பற்றிச் சிறப்பித்துக் கூறுவது என்றால் மகளிர்க்கு இன்றியமையாத கற்பினைத் தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவள். இவளைத தெய்வம் என்று மதிக்கிறேன். இவள் கற்புக்கடம் பூண்ட தெய்வம்; இவளுக்கு நிகராக வேறு தெய்வத்தை நான் கண்டது இல்லை. இவர்களைப் போலக் கற்புடை மகளிர் வாழ்வதால்தான் நாட்டில் மழை பெய்கிறது; வளம் சிறக்கிறது. ஆட்சி செம்மையாக நடைபெறுகிறது; பத்தினிப் பெண்டிர் வாழும் நாடு இத்தகைய சிறப்புகள் அடைகின்றன; அதனால் இவளை ஏற்று உதவுக' என்று கூறினார்.