பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 கால்கோள் காதை

பாண்டியரை; நீ சினம் ஆறுக' என்று அறிவித்தனன். 'வஞ்சின மொழி கேட்டு அவர் அஞ்சி அடங்குவர்; நின் வஞ்சினத்துக்கு எதிராக நின்று போர் செய்யும் மன்னர்கள் யாரும் இல்லை” என்றனன். அவர்களுள் நிமித்திகன் எழுந்து நின்று, "காலம் கூடி உள்ளது. செல்லுதற்கு உரிய நற்பொழுது இது; நீ குறித்த

திசைமேல் எழுக! படை எழுச்சி பெறுக' என்று கூறினான்.

அரசன் உடனே, "வாளையும், குடையையும் வடதிசை நோக்கிப் பெயர்க்க' என ஆணை இட்டனன்.

சேனைகள் ஆரவாரித்தன. முரசு எழுந்து ஒலித்தது; இரவு இருட்டை விலக்கிய ஒளி விளக்குகளின் வெளிச்சத்தில் கொடிகள் வரிசையாக அசைந்தன. பகைவரை வாட்டும் சேனை வீரர்களும், ஐம்பெருங்குழுவினரும், எண் பேராயத்தினரும், யானை வீரர்களும், கணித்துக் கூறும் காலக் கணிதரும், அறம் கூறும் சான்றோரும், படைத்தலைவர்களும், 'நில உலகை ஆளும் மன்னன் வாழ்க" என்று வாழ்த்துக் கூறினர்.

பெருங்களிறு ஒன்றின் மீது வாளையும், வெண் கொற்றக் குடையையும் வைத்து அதனை மதிற்புறத்து இருந்த கொற்றவை கோயில் முன் நிறுத்தினர்; வஞ்சிப் பூவுடன் பனம்பூவையும் அவ் யானைக்கு அணிவித்துச் சேரனின் அவைக்குச் சென்றனர்.

போரை விரும்பிப் படைக்குத் தலைமை தாங்கிய படைத் தலைவர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான். வஞ்சி மாநகரில் சேரன் வஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டான்; பிறநாட்டு அரசர்கள் திறை கொண்டு வந்து செலுத்த அவர்களை அழைக்கும் முரசு காலையில் ஒலித்தது. சிவனின் திருவடிகளை வணங்கிப் பின் யானை மீது ஏறினான். அதனை அடுத்துச் "செங்குட்டுவன் வெற்றி கொள்க' என்று வாழ்த்தி தெய்வப் பூ மாலை கொண்டு வந்து தந்தனர். அது திருவனந்தபுரத்து ஆடகமாடம் என்னும் திருமால் கோயிலினின்று கொண்டுவரப்பட்டது. சிவனை வணங்கிய தன் சிரசில் அதை ஏற்றுக் கொள்ளாமல் தோளில் தாங்கினான். அவன் போர்ப் பயணம் தொடங்கியது.

நாடக மடந்தையர் ஆடரங்கு எங்கும் அரசனுக்கு வாழ்த்துக் கூறினர்: "கொற்ற வேந்தே! நீ வெற்றி கொள்க!